களைகட்டும் ஜனாதிபதி தேர்தல்: கட்சிகளுடன் பேசுவதற்கு இரு டாப் லீடர்களைக் கொண்ட குழு அமைத்தது பாஜக!
டெல்லி: ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான குழு ஒன்றை பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) இன்று அமைத்துள்ளது.
நாட்டின் ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது. ஜூலை 21-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். நாட்டின் புதிய ஜனாதிபதி ஜூலை 25-ல் பதவியேற்க உள்ளார்.
புதிய ஜனாதிபதியை மாநிலங்களில் எம்.எல்.ஏக்கள் மற்றும் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.க்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பர். சட்டசபை, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் நியமன எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களுக்கு வாக்குரிமை இல்லை.
2017-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது பாஜக, ராம்நாத் கோவிந்தை நிறுத்தியது; எதிர்க்கட்சிகளோ கடைசி நேரத்தில் மீரா குமாரை நிறுத்தின. அதேபோல் கடைசிவரை பரபரப்பு நிலவக் கூடாது என்பதற்காக இம்முறை எதிர்க்கட்சிகள் முன்கூட்டியே ஆலோசனைகளை தீவிரப்படுத்தி உள்ளன. டெல்லியில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி ஏற்பாடு செய்துள்ளார். பாஜக அல்லாத 22 கட்சித் தலைவர்கள், 8 மாநில முதல்வர்களுக்கு மமதா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜகவைப் பொறுத்தவரையில் பெரும்பாலான கட்சிகள் ஏற்கக் கூடிய ஒருவரை வேட்பாளராக நிறுத்துவதில் தீவிரமாக உள்ளது. அதாவது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் கூட்டணியில் இல்லாத கட்சிகள் என அனைத்து தரப்பின் ஆதரவையும் பெறுவதற்கு பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
இந்த நிலையில் பாஜக தரப்பில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்த நடத்த ஒரு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டா, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். பாஜக அறிவிக்கும் ஜனாதிபதி வேட்பாளருக்கு பிற கட்சிகளின் ஆதரவைப் பெற்றுத்தரக் கூடிய பேச்சுவார்த்தைகளை ஜேபி நட்டா, ராஜ்நாத்சிங் குழு மேற்கொள்ளும் என அக்கட்சி இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.