பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா: புல்வாமாவில் பலியான மே.வங்க வீரர் குடும்பமும் பங்கேற்பு
Recommended Video
டெல்லி: நாட்டின் பிரதமராக மீண்டும் இன்று பிரதமர் மோடி பதவியேற்கிறார். இப்பதவி ஏற்பு விழாவில் காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலில் பலியான மேற்கு வங்க ராணுவ வீரரின் குடும்பத்தினரும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளனர்.
நாடு பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருந்த நேரத்தில் ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் ராணுவ வீரர்களின் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீரமரணடைந்தது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இத்தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானுக்குள் நுழைந்து இந்திய விமானப் படையினர் பதிலடி கொடுத்தனர். இத்தாக்குதல் நடவடிக்கையின் போது தமிழகத்தைச் சேர்ந்த அபிநந்தன் என்கிற விமானப் படை வீரர், பாகிஸ்தான் படையினரால் கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டார்.

புல்வாமாவும் தேர்தலும்
இதனால் இந்தியா- பாகிஸ்தான் இருநாடுகளிடையே பெரும் போர் பதற்றம் உருவானது. இந்த விவகாரங்கள் லோக்சபா தேர்தல் களத்திலும் எதிரொலித்தன. பிரதமர் மோடி தமது பிரசாரத்தில், தம்மால்தான் எல்லை தாண்டி தாக்குதலை நடத்த முடிந்தது என உரத்து பேசினார்.

எதிர்க்கட்சிகள் புகார்
இது தேர்தல் விதிகளை மீறிய பிரசாரம் என தேர்தல் ஆணையத்தில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் புகார் அளித்தன. ஆனாலும் தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி, விதிகளை மீறவில்லை என கூறிவிட்டது. பிரதமர் மோடியின் பிரசாரத்துக்கு காங்கிரஸும் பதிலடி கொடுத்துப் பார்த்தது. ஆனால் அந்த பிரசாரம் எடுபடவில்லை.

பாஜக வெற்றிக்கு உதவி
லோக்சபா தேர்தலில் பாஜக அமோக வெற்றியை வட இந்திய மாநிலங்களில் அறுவடை செய்ததற்கு பிரதமர் மோடியின் இந்த பிரசாரமும் பெரும் உதவி செய்தது. இந்நிலையில் இன்று மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்கிறார்.

6,000 விருந்தினர்கள்
மோடியின் பதவி ஏற்பு நிகழ்ச்சிக்கு 6,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். பிம்ஸ்டெக் எனப்படும் வங்கக் கடல் சார்பு நாடுகளின் தலைவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் ஆதாயம்
மேலும் மேற்கு வங்கத்தில் அரசியல் படுகொலைக்குள்ளான பாஜக தொண்டர் குடும்பத்தினரும் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் பலியான மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரும் மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் இன்று காலை டெல்லி வந்தடைந்தனர்.

மமதா புகார்
ஏற்கனவே மோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு அரசியல் சாயம் பூசப்படுவதால் இந்த நிகழ்ச்சியை புறக்கணிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அறிவித்திருக்கிறார். இதனிடையே பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த புல்மாவா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் யாரும் அழைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications