"ரூபாய் நோட்டுக்களில் சாவர்க்கர், மோடி படம் போடுங்க".. கெஜ்ரிவாலை மிஞ்சிய பாஜக எம்.எல்.ஏ!
டெல்லி: ரூபாய் நோட்டுகளில் கடவுள் படத்தை போடுமாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய நிலையில் அவருக்கு பதில் தரும் வகையில், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் ரூபாய் நோட்டுகளில் பிரதமர் மோடியின் படத்தையும் வீர சாவர்க்கரின் படத்தையும் போடுமாறு ட்விட் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர். ''அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதாகவும் ரூபாய் நோட்டுக்களில் கடவுள் லட்சுமி மற்றும் விநாயகர் படங்களை அச்சிட வேண்டும் என்றும் பிரதமர் மோடியை கேட்டுக்கொள்வதாக கூறியிருந்தார்.

நமது நாட்டில் ஏன் செய்ய முடியாது
மேலும் அவர் கூறுகையில், ''இந்தியா செல்வ வளம் மிக்க நாடாகவும் ஒவ்வொரு குடும்பமும் செழிப்பாக இருக்க வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். சில சமயங்களில் எவ்வளவு உழைத்தாலும் கடவுளின் ஆசிர்வாதம் இல்லையென்றால் அது எந்த பலனையும் கொடுக்காது. முஸ்லிம் நாடான இந்தோனேசியாவில் கரன்சி நோட்டுக்களில் விநாயகர் படம் உள்ளது. இந்தோனேசியாவில் அதை செய்யும் போது நமது நாட்டில் ஏன் செய்ய முடியாது.

ரூபாய் நோட்டில் காந்தி படம்
மேலும் புதிதாக அச்சடிக்கும் நோட்டுக்களில் ஒருபக்கம் மகாத்மா காந்தியின் படமும் மறுபக்கம் கடவுளின் படங்களும் இடம் பெறலாம் என்றும் கடவுளின் படம் இடம்பெற்றால் நாடு வளம் பெறும்" என்று பேசியிருந்தார். அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த பேச்சு பெரும் விவாதப்பொருளானது. இந்துத்துவா வாக்குகளை பெறும் நோக்கில் கெஜ்ரிவால் இப்படி பேசுவதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்தன. பாஜகவும், தனது இந்து விரோத முகத்தை மறைப்பதற்காக கெஜ்ரிவால் இப்படி பேசுவதாக விமர்சித்து இருந்தது.

மோடி, சாவர்க்கர் படம்
கெஜ்ரிவாலின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் புதிய பேசுபொருளுக்கு வித்திட்ட நிலையில், மகாராஷ்டிரா மாநில காட்கோபர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ ராம் கடம் ஒரு படி மேலே போய், ரூபாய் நோட்டில் சவார்க்கர், பிரதமர் மோடியின் படங்களை அச்சிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், மகாராஷ்டிர பேரரசர் சிவாஜி, பிஆர் அம்பேத்கர், சவார்க்கர் மற்றும் மோடியின் இடம் பிடித்த போட்டாஷாப் செய்யப்பட்ட 500 ரூபாய் தாள்கள் படத்தை பகிர்ந்து இருந்தார்.

தேர்தல் நேரத்தில் மட்டும் ஏன்
இந்த பதிவுடன் அகண்ட பாரதம், நய பாரத், மகான் பாரத், ஜெய் ஸ்ரீராம் உள்ளிட்ட வாசகங்களையும் பதிவிட்டு இருந்தார். ராம் கடம் தனது ட்விட் பதிவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மறைமுகமாக விமர்சித்தும் பதிவிட்டு இருந்தார். அவர் வெளியிட்ட ட்விட் பதிவில், ''வஞ்சக அரசியல் செய்யப்படுகிறது. உண்மையில் அவர் ஆழ்மனதில் இருந்து இப்படி ஒரு கோரிக்கையை வைத்து இருந்தால் இந்த தேசம் ஏற்றுக்கொண்டு இருக்கும். இவர்கள் தேர்தல் வரும் போது மட்டுமே எங்களின் தெய்வங்கள் பற்றி நினைப்பார்கள் என்பதை அவரது கடந்த காலம் நினைவு படுத்துகிறது" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications