தடுப்பூசி தட்டுப்பாடு.. மோடிக்கு, ராகுல்காந்தி கடிதம்.. தடுப்பூசி ஸ்டாக் இருக்கு.. அமித்ஷா விளக்கம்
டெல்லி: ''இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்'' என்று பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பான மாநிலங்களில் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா,' அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி அளவுகள் வழங்கப்படுகின்றன'' என்று தெரிவித்தார்.
வேகமெடுக்கும் கொரோனா
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,30,000-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம் என பல்வேறு மாநிலங்களில் கொரோனா வேகம் எடுத்துள்ளது. கொரோனாவை ஒடுக்க நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
முதற்கட்டமாக மருத்துவ மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அடுத்தகட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள் கொரோனா தடுப்பூசி தீர்ந்து விட்டதாக மத்திய அரசிடம் புகார் கூறின.
பாரபட்சம் காட்டுவதாக புகார்
மகாராஷ்டிரா, ஆந்திரா தங்கள் மாநிலங்களில் தடுப்பூசி ஸ்டாக் இல்லை என்று மத்திய அரசிடம் புகார் தெரிவிதித்தன. சத்தீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்களும் இதையையே கூறின. பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக அளவு டோஸ் கொடுக்கிறார்கள். எங்களுக்கு தர மறுக்கிறார்கள் என்று மகாராஷ்டிரா நேரடியாக குற்றம்சாட்டியது. நாட்டில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை என்றும் தேவையான தடுப்பூசி இருப்பில் உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் கூறினார்.
பிரதமருக்கு ராகுல் கடிதம்
காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி ''இந்தியாவில் தடுப்பூசி தட்டுப்பாடு இருக்கும் நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியை நிறுத்த வேண்டும்'' என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், '' கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை என்பது மிகவும் கடுமையான பிரச்சினை; கொண்டாட்டம் அல்ல. தடுப்பூசியை ஏற்றுமதி செய்து நமது நாட்டு மக்களை ஆபத்தில் ஆழ்த்துவது சரியானதா? எந்தவொரு சார்பு இல்லாமல் மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் உதவ வேண்டும். இந்த தொற்றுநோயை நாம் அனைவரும் ஒன்றாக எதிர்த்துப் போராட வேண்டும், அதைத் தோற்கடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அமித்ஷா மறுப்பு
இந்த நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு தொடர்பான மாநிலங்களில் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, '' தடுப்பூசி பற்றாக்குறை தொடர்பாக மாநிலங்கள் கூறும் தகவல்கள் சரியாக இல்லை. அனைத்து மாநிலங்களுக்கும் போதுமான அளவு தடுப்பூசி அளவுகள் வழங்கப்படுகின்றன.தடுப்பூசிகள் போதிய அளவில் ஸ்டாக் உள்ளன என்று தெரிவித்தார். தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மும்பையில் 71 தடுப்பூசி மையங்கள் மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.