கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல்காந்தி பாதையாத்திரை...அக்.2ல் தொடங்கும் சோனியா அறிவிப்பு
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாடு முழுவதும் பாதயாத்திரை செல்கிறார் ராகுல்காந்தி. லோக்சபா தேர்தலுக்கு முழுவீச்சில் தயாராகிறார் ராகுல்காந்தி
டெல்லி: லோக்சபா தேர்தல் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில் முழு வீச்சில் களமிறங்குகிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல்காந்தி. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் பாதையாத்திரை சென்று மக்களை நேரில் சந்திக்கப்போகிறார். அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தியன்று பேரணி தொடங்கும் என்று சோனியாகாந்தி அறிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி 2005ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை பத்தாண்டுகள் ஆட்சியில் இருந்தது. பாஜக நிகழ்த்திய மாயாஜாலம்... மோடி ஆதரவு அலை காரணமாக 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தது.
2 மாங்காய்.. சைலன்ட்டாக சாதித்த சேகர் பாபு..
2014 தேர்தலில் இருந்து தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது காங்கிரஸ் கட்சி. மத்தியில் மட்டுமல்ல பல மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆளுங்கட்சியாக இல்லை ஏன் எதிர்கட்சியாகக் கூட இல்லை. சமீபத்தில் நடந்து முடிந்த 5 மாநில தேர்தலிலும் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சியை பறி கொடுத்தது காங்கிரஸ் கட்சி.
.
2024 லோக்சபா தேர்தல்
வரும் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெறும் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாட்டில் அடுத்த லோக்சபா தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் அக்கட்சி தலைவர் சோனியாகாந்தி ஆலோசனை நடத்தி உள்ளார்.
கட்சிக்கு புத்துயிர் ஊட்ட மாநாடு
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்கும், தொடர் தோல்விகளால் துவண்டு போய் உள்ள கட்சிக்கு புத்துயிரூட்டவும் ராஜஸ்தான் மாநிலம், உதய்ப்பூரில் காங்கிரஸ் 3 நாள் சிந்தனை அமர்வு மாநாட்டினை 'நவ் சங்கல்ப் சிந்தன் ஷிவிர்' என்ற பெயரில் நடத்தி வருகிறது.
ஆளும் கட்சிக்கு எதிரான போராட்டங்கள்
கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்த அமர்வில் கட்சி பொதுச்செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள், பல்வேறு மாநில சட்டசபை காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டின் 2வது நாளான நேற்று, பெருகி வரும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் மற்றும் மத்திய அரசின் தவறான கொள்கைகள் குறித்து அடுத்த கட்ட போராட்டம் நடத்தி மக்களிடம் எடுத்துச்செல்வதற்கான வழிவகைகள் குறித்து ஆராயும் முக்கிய அமர்வு நடந்தது
ராகுல்காந்தி பாதையாத்திரை
இந்த நிலையில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாடு முழுவதும் பேரணி நடத்தப்படும் என்று சோனியாகாந்தி அறிவித்துள்ளார். அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளில் இந்த பேரணி தொடங்க உள்ளது. ராகுல்காந்தி தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும் என்று சோனியாகாந்தி அழைப்பு விடுத்துள்ளார். லோக்சபா தேர்தலுக்குப் முன்பாக கட்சியை பலப்படுத்த முழுவீச்சில் களமிறங்குகிறார் ராகுல்காந்தி
பிரதமர் வேட்பாளர் யார்
கடந்த 2014,2019 தேர்தலின் போது பாஜக தனது பிரதமர் வேட்பாளராக மோடியை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்தது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. வரும் 2024 ஆம் லோக்சபா தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தி முன்னிறுத்தப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒன்றிணையுமா எதிர்கட்சிகள்
பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகள் ஒன்றாக இணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கருத்துக்கள் எழுந்துள்ளன. எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் கடந்த சில ஆண்டுகாலமாகவே முயற்சி செய்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி தலைமையில் எதிர்கட்சியினர் ஒன்றிணைவார்களா? ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.