பெண்களை மனிதர்களாக கருதுவதில்லை.. வெட்கக்கேடான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் - வெடித்த ராகுல்காந்தி
டெல்லி : தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணை தாக்கிய சம்பவத்திற்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாக கருதுவதில்லை எனவும், இந்த வெட்கக்கேடான உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவர் மர்ம கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார். இந்த தகவல் வெளியான நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணையே அருகில் வசிக்கும் மக்கள் கொடூரமாக தாக்கினர்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், சில பெண்களுடன் சேர்ந்து கொடூரமாக தாக்கினர். பெண் தாக்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் குறித்து நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் பெண்ணை தாக்கியதாக 14 வயது சிறுவன் 8 பெண்கள் உள்பட 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு தாக்கப்பட்ட நிகழ்வுக்கு கடும் கண்டனங்கள் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, "20 வயது பெண் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட வீடியோ நமது சமூகத்தின் மிகவும் கவலைக்கிடமான முகத்தை அம்பலப்படுத்துகிறது. கசப்பான உண்மை என்னவென்றால், பல இந்தியர்கள் பெண்களை மனிதர்களாகக் கருதுவதில்லை. இந்த வெட்கக்கேடான உண்மை ஒப்புக்கொள்ளப்பட வேண்டும்." என பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications