ஏர்டெல் வோடபோனை தொடர்ந்து ஜியோவும் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிப்பு
டெல்லி: சக போட்டியாளர்களான பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களை பின்பற்றி அடுத்த சில வாரங்களில் கட்டணங்களை உயர்த்துவதாக ரிலையன்ஸ் ஜியோ செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பு ஒரு மிகப்பெரிய விலை குறைப்பு யுத்ததிற்கு பின்னர் தொலைத்தொடர்பு துறையில் வந்திருக்கிறது. எனவே தெலைத்தொடர்பு துறையின் வருவாயை மீட்டெடுக்க இந்த முடிவு உதவும் என்கிறார்கள் தொழில்துறையினர்.
சரி விஷயத்துக்கு வந்திடுவோம். ஜியோவின் வருகையால் ஒரு ஜிபி டேட்டாவை 150 ரூபாய்க்கு மேல் விற்றவர்கள், இப்போது அதே பணத்திற்கு தினமும் ஒரு ஜிபி 4ஜி டேட்டா மற்றும் அளவில்லா இலவச அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்களை 28 நாளைக்கு இலவமாக தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

குற்றச்சாட்டு
இதன் காரணமாக வாடிக்கையாளர்களை பெருமளவு இழந்த வேடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொழில் போட்டியில் சமநிலை இல்லை என நேரடியாகவே குற்றம்சாட்டி வருகின்றன.

வெளிச்சத்துக்கு வந்தது
இதற்கிடையே கடைசியாக வெளியான காலாண்டு நிதிநிலை அறிக்கையில் வேடாபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான நஷ்டத்தைசந்தித்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஏர்டெல் அறிவிப்பு
இந்த சூழலில் வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.

கட்டணம் உயருகிறது
இந்நிலையில் ஜியோ நிறுவனமும் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "மற்ற ஆபரேட்டர்களைப் போலவே, நாங்கள் இந்திய நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் தொழில்துறையை வலுப்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம். டேட்டா பயன்பாடு மற்றும் இணைய வளர்ச்சி மற்றும் முதலீடுகளை மோசமாக பாதிக்காத வகையில் அடுத்த சில வாரங்களில் கட்டணங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்போம்" என்று கூறியுள்ளது.

4ஜி சேவை விரிவாக்கம்
வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்த அடுத்த ஒரு நாளிலேயே ஜியோ நிறுவனம் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்துள்ளதற்கு காரணம் வருவாயை அதிகரிக்கவும், 4ஜி சேவை விரிவாக்கத்தில் முதலீடு செய்யவும் என்பதே ஆகும்.












Click it and Unblock the Notifications