டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு.. கம்பீரமாக பங்கேற்க இருக்கும் தமிழக அரசின் அலங்கார ஊர்தி
டெல்லி: குடியரசு தின அணி வகுப்பில் கலந்து கொள்ள தமிழக அரசின் அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7 கட்டமாக நடைபெற்ற தேர்வுகளின் முடிவில் தமிழகம் உள்பட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன
குடியரசு தின விழாவை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறும். இந்த அணிவகுப்பில் கடந்த ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்திக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டிலிருந்து நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வ.உ.சி., மகாகவி பாரதியார், இராணி வேலுநாச்சியார், மருது சகோதரர்கள் ஆகிய விடுதலைப் போராட்ட வீரர்களின் உருவங்கள் அடங்கிய ஊர்தி இடம்பெறுவது மறுக்கப்பட்டு இருந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

மு.க ஸ்டாலின் கடிதம்
தமிழக அரசின் ஊர்தி இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் கடிதமும் எழுதியிருந்தார். இருந்தாலும் தமிழக அரசின் ஊர்திக்கு இடம் கொடுக்கப்படவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளித்த மத்திய அரசு, எந்தெந்த மாநிலங்களின் ஊர்திகள் பங்கேற்க வேண்டும் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை எனவும் அதற்காக அமைக்கப்பட்டு இருக்கும் நிபுணர் குழுதான் முடிவு செய்வதாக கூறியிருந்தது.

குடியரசு தின விழா
இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் கூட எழுப்பப்பட்டு இருந்தது. டெல்லியில் நிராகரிக்கப்பட்ட தமிழக அரசின் அலங்கார ஊர்தி தமிழகம் முழுவதும் மக்கள் பார்வைக்காக பல்வேறு மாவட்டங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், வரும் 26 ஆம் தேதி இந்தியாவின் 74-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மூவர்ணக் கொடியை ஏற்றுகிறார்.

அனுமதி கொடுக்கப்படுமா?
குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிபது அதிபர் கலந்து கொள்கிறார். இந்தக் குடியரசு தின விழாவின் போது மாநில அரசுகளின் அலங்கார ஊர்திகளும் வழக்கம் போல் இடம் பெறுகின்றன. கடந்த முறை தமிழக அரசின் ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்த நிலையில், நடப்பு ஆண்டு அனுமதி கொடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்புகள் நிலவி வந்த நிலையில், இந்த ஆண்டு தமிழக அரசின் அலங்கார ஊர்தி அணி வகுப்பில் இடம் பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக அலங்கார ஊர்திக்கு அனுமதி
குடியரசு தின ஊர்வலத்திற்கு தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. கொரோனா விதிகளை பின்பற்றி அலங்கார ஊர்திகளை அமைக்கும் பணியை தொடங்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல்லியின் கண்டோன்மெண்ட் பகுதியில் இதற்கான பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications