விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்கிறீர்களா அல்லது நாங்கள் செய்யவா?மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் குட்டு
டெல்லி: விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் போக்குக்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மேலும் மூன்று விவசாய சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கிறீர்களா அல்லது நாங்கள் அதை செய்யவா? என்றும் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து பல ஆயிரக்கணக்கான விவசாயிகள் 48 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வி அடைந்துள்ளன.
ஜன.15-ல் பேச்சுவார்த்தை
அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜனவரி 15-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.
உச்சநீதிமன்றம் அதிருப்தி
திமுக எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோர் இந்த வழக்கை தொடர்ந்திருந்தனர். இதனை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே, விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு கையாளும் போக்குக்கு அதிருப்தியை தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் கேள்வி
மேலும், மத்திய அரசு விவசாய சட்டங்களை சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்தால்தான் என்ன? விவசாய சட்டங்களை நிறுத்தி வைக்க மத்திய அரசு தயார் எனில் உச்சநீதிமன்றம் ஒரு குழு அமைக்க தயாராக உள்ளது.
நாங்கள் நிறுத்தி வைக்கவா?
விவசாய சட்டங்களை நிறுத்த மத்திய அரசு தயாராக உள்ளதா? விவசாய சட்டங்களை நீங்கள் (மத்திய அரசு) நிறுத்துகிறீர்களா? அல்லது நாங்கள் அதை செய்யவா? எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே கேள்வி எழுப்பினார்.