சர்ச்சைக்குரிய விமர்சனம்- மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் கால அவகாசம்- பிரசாந்த் பூஷன் நிராகரிப்பு
டெல்லி: நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாகி இருக்கும் விமர்சனத்தை மறுபரிசீலனை செய்ய மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. ஆனால் இந்த கால அவகாசத்தை பிரசாந்த் பூஷன் நிராகரித்திருக்கிறார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, சொகுசு இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருக்கும் படம் அண்மையில் வெளியானது. இதனை சமூக வலைதளப் பக்கங்களில் விமர்சித்திருந்தார் பிரசாந்த் பூஷன்.
இதனால் உச்சநீதிமன்றம், தாமாக முன்வந்து பிரசாந்த் பூஷனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. பிரசாந்த் பூஷனின் முந்தைய நீதித்துறை மீதான விமர்சனங்களும் வழக்குகளும் இவ்வழக்கில் சேர்த்து கொள்ளப்பட்டது.
மாநில அரசுகளை 'டம்மியாக்க' சூழ்ச்சி... மத்திய அரசு மீது பாயும் வேல்முருகன்
பிரசாந்த் பூஷன் மனு
இவ்வழக்கில் பிரசாந்த் பூஷன் குற்றவாளி என தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இன்று தண்டனை விவரங்களை அறிவிப்பதாக கூறியது. இதனிடையே மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்ய இருப்பதால் தண்டனை குறித்த விவாதங்களை ஒத்திவைக்க வேண்டும் என்று பிரசாந்த் பூஷன் புதிய மனு தாக்கல் செய்திருந்தார்.
கருத்துக்கு வருத்தம் தேவை
இந்த மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆர். கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தள்ளுபடி செய்தது. இன்றைய விசாரணையின் போது நீதிபதி அருண் மிஸ்ரா கூறியதாவது: இந்த பூமிப்பந்தில் தவறு செய்யாத மனிதர்கள் யாருமே இருக்க முடியாது; நீங்கள் 100 நல்லது செய்திருக்கலாம்... அதற்காக 10 குற்றங்களை செய்வதற்கு லைசென்ஸ் கொடுத்துவிட முடியாது. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். நீதிமன்ற அவமதிப்புக்குள்ளான விமர்சனத்துக்காக வருத்தப்பட வேண்டும் என்றார்.
பிரசாந்த் பூஷன் மனு தள்ளுபடி
மேலும், இந்த வழக்கில் தண்டனை வழங்கப்பட்டாலும் கூட அது மறுபரிசீலனை செய்யப்படும். நாங்கள் நியாயமாகவே இருக்க முயற்சிப்போம். இந்த பெஞ்ச்சை தவிர்க்க முயற்சிக்கிறீர்களா? என கேள்வி கேட்டனர் நீதிபதிகள். மேலும் பிரசாந்த் பூஷனின் தண்டனை விவாதங்களை ஒத்திவைக்க கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து பிரசாந்த் பூஷன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் வாதங்களை முன்வைத்தார்.
தவறுதலாக புரிதல்
ராஜீவ் தவான் தமது வாதத்தில் கூறியதாவது; நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது மிகுந்த வேதனையைத் தருகிறது. தண்டனை வழங்கப்படும் என்பதற்காக வருத்தப்படவில்லை. என்னுடைய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்பதுதான் வருத்தம். ஜனநாயகத்தையும் அதன் விழுமியங்களையும் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனங்கள் அவசியமானவை என்றே கருதுகிறேன். ஒரு நிறுவனத்தை செழுமைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்னுடைய ட்விட்டர் பதிவுகள் பதிவிடப்பட்டன. நான் கருணை காட்டுமாறு கேட்கவில்லை. நான் மன்னிப்பு கேட்கப் போவதும் இல்லை. இந்த நீதிமன்றம் என்ன தண்டனை அளித்தாலும் அதை ஏற்க தயார் என்றார்.
வழக்கறிஞர்களுடன் ஆலோசனை
அப்போது, உங்கள் விமர்சனத்தை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும்..2 அல்லது 3 நாட்கள் கூட எடுத்து கொள்ளலாம் என்று நீதிபதிகள் கேட்டுக் கொண்டனர். இதற்கு பதிலளித்த பிரசாந்த் பூஷன் தரப்பு வழக்கறிஞர் ராஜீவ் தவான், மாண்புமிகு நீதிபதிகள் விரும்பினால் என்னுடைய விமர்சனத்தை திரும்பப் பெறுகிறேன். ஆனால் என்னுடைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது. உங்களது நேரங்களை நான் வீணாக்கவும் விரும்பவில்லை. நான் என்னுடைய வழக்கறிஞருடன் ஆலோசனை நடத்திவிட்டு தெரிவிக்கிறேன் என்றார். இதற்கு பதில் கொடுத்த நீதிபதி அருண் மிஸ்ரா, உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்வதுதான் சரியாக இருக்கும். சட்டம் சார்ந்த மூளையை மட்டுமே பயன்படுத்தாதீர்கள் என்றார்.
லட்சுமண ரேகை
மேலும், ஒவ்வொருவருக்கும் ஒரு வரையறுக்கப்பட்ட எல்லை- லட்சுமண ரேகை என்பது உண்டு. ஏன் அதை மீற வேண்டும்? பொதுமக்களின் நலன்களுக்காக நல்ல வழக்குகள் வருகின்றபோது அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் இது மிகவும் சிக்கலான விஷயம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். நீதிபதியாக 24 ஆண்டுகள் பணியாற்றிய காலத்தில் அவமதிப்பு குற்றத்துக்காக யாரையும் குற்றவாளி என தீர்ப்பளித்தது இல்லை. குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது தற்போதுதான் முதல் முறை. கருத்து சுதந்திரம் என்பது அனைவருக்கும் உண்டுதான். அது முழுமையானதும் அல்ல. சமூக செயற்பாட்டாளராக இருப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் எல்லை இருக்கிறது என்றார் நீதிபதி அருண் மிஸ்ரா.
உச்சநீதிமன்ற அவகாசம் நிராகரிப்பு
பின்னர் நீதிபதிகள் கவாய், நீங்கள் விமர்சனத்தை மறுபரிசீலனை செய்கிறீர்களா? என பிரசாந்த் பூஷன் தரப்பில் கேட்கப்பட்டது. ஆனால் பிரசாந்த் பூஷன் தரப்பில் விமர்சனத்தை மறுபரிசீலனை செய்யப் போவதில்லை என கூறி நீதிமன்றம் அளித்த கால அவகாசத்தை நிராகரித்தது.