இடஒதுக்கீடு வரம்பு 50% என்பதை மறுபரிசீலனை செய்யலாமா? மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: அரசு நிறுவனங்களில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 50% இடஒதுக்கீடு நீடிப்பது தொடர்பாக மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்திரா சகானி வழக்கு அல்லது மண்டல் கமிஷன் வழக்கில் 1992-ல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் கல்வி, வேலைவாய்ப்பில் மாநிலங்கள் 50% இடஒதுக்கீட்டை பின்பற்றலாம் என தீர்ப்பளித்தது. அதேநேரத்தில் தமிழகத்தில் அப்போதைய அதிமுக அரசு 69% இடஒதுக்கீட்டை அமல்படுத்தியது. அத்துடன் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று அரசியல் சாசனத்திலும் இடம்பெறச் செய்தது.
தமிழகத்தின் 69% இடஒதுக்கீடு என்பது அரசியல் சாசனப்படி பாதுகாப்பானது. இருப்பினும் 69% இடஒதுக்கீடுக்கு எதிராக தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டும் வருகின்றன. இந்த வழக்கை மகாராஷ்டிராவில் மராத்தா ஜாதியினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்குக்குப் பின் விசாரிக்கலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
மகாராஷ்டிராவில் பூர்வகுடிகளான மராத்தா ஜாதியினருக்கு 2018-ல் கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்தும் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, 50% இடஒதுக்கீடு தொடர்பாக மாநிலங்களின் கருத்துகளை கேட்டறியலாம் என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதனையடுத்து 50% இடஒதுக்கீடு கொள்கையை தொடருவது தொடர்பாக மாநில அரசுகள் கருத்து தெரிவிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் இடஒதுக்கீடு விவகாரத்தில் மாநில அரசுகளின் உரிமை பறிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் ஆராய உள்ளது.
1992-ல் இந்திரா சகானி வழக்கில் அளிக்கப்பட்ட 50% இடஒதுக்கீடுதான் இருக்க வேண்டும் என்கிற தீர்ப்பை 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் ஆராய வேண்டுமா? என்பது குறித்தும் உச்சநீதிமன்றம் ஆய்வு செய்ய உள்ளது. அத்துடன் வரும் 15-ந் தேதி முதல் நாள்தோறும் இந்த வழக்கின் விசாரணை நடைபெறும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.