தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி பானுமதி இன்றுடன் பணி ஓய்வு- உருக்கமான பிரியா விடை
டெல்லி: தமிழகத்தின் உச்சநீதிமன்ற முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரிய நீதிபதி பானுமதி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
நீதிபதியாக தாம் பணி புரிந்த காலத்தில் தேசத்தை திரும்பிப் பார்க்க வைத்த பல தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது ஜல்லிக்கட்டு, கிடா சண்டை அத்தனைக்குமே தடை விதித்து தீர்ப்பு அளித்தவர் நீதிபதி பானுமதி.
மாற்றி பேசிய பெண் போலீஸ்.. அதிரடி கைதுக்கு வாய்ப்பு.. பரபரப்படையும் சாத்தான்குளம் கொலை வழக்கு!
பிரேமானந்தா சாமியார் வழக்கு
மிகவும் பிரபலமான பிரேமானந்தா சாமியார் மீதான பலாத்கார வழக்கில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பரபரப்பான தீர்ப்பு வழங்கினார். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள்- போலீசார் இடையேயான மோதலில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாக சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டவரும் நீதிபதி பானுமதிதான்.
நிர்பயா வழக்கில் தீர்ப்பு
தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ள தடை விதித்தார்; சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் போலீசாருக்கான பணிமூப்பு உயர்வை ரத்து செய்தார்; தேசத்தையே அதிர வைத்த நிர்பயா பலாத்கார வழக்கில் நீதிபதி பானுமதி பெஞ்ச்தான் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்கியது; ஐ.என்.எக்ஸ் வழக்கில் திஹார் சிறையில் இருந்த முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியதும் நீதிபதி பானுமதி.
பணி ஓய்வு- பிரியா விடை நிகழ்ச்சி
இத்தகைய பரபரப்பான தீர்ப்புகளை வழங்கிய நீதிபதி பானுமதி இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு வெள்ளிக்கிழமையன்று பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெற்றது. அப்போது பேசிய நீதிபதி பானுமதி, தமது தந்தை விபத்தில் இறந்தார். அப்போது தமக்கு 2வயது. ஆனால் நீதித்துறை குழப்பங்களால் சட்டப்படி எங்களுக்கான தீர்வு வழங்கப்படாமலேயே போனது என உருக்கமாக சுட்டிக்காட்டினார்.
சொந்த ஊர் ஊத்தங்கரை
தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 1955-ம் ஆண்டு பிறந்தவர் நீதிபதி பானுமதி. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் படித்த பானுமதி, 1988-ல் மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்தார். பின் 2003-ல் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.
தமிழகத்தின் முதல் உச்சநீதிமன்ற பெண் நீதிபதி
2013-ல் ஜார்க்கண்ட் மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் 2014 ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார். உச்சநீதிமன்றத்தில் 6-வது பெண் நீதிபதி என்பதுடன் தமிழகத்தை சேர்ந்த உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி என்ற பெருமைக்குரியவரானார் பானுமதி. உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியத்தில் இடம்பெற்ற 2-வது பெண் நீதிபதியும் பானுமதி ஆவார்.