உ.பி.யில் புல்டோசரில் வீடுகளை இடிக்க தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு.. பழிவாங்க கூடாது என அட்வைஸ்
டெல்லி: உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பா.ஜ.க. அரசால் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிக்கப்படுவதற்கு எதிராக ஜமியத் உலேமா ஏ ஹிந்த் தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் போது, உ.பி.யில் வீடுகளை இடிக்க இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்தது. அதேநேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகள் அகற்றம் இருக்கக் கூடாது எனவும் உச்சநீதிமன்றம், உ.பி. அரசுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகிகள் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் உள்ளிட்டோர் அவதூறாக இழிவுபடுத்தினர். இந்த விவகாரம் சர்வதேச பிரச்சனையாக வெடித்தது.

நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் கடந்த 3-ந் தேதி போராட்டத்தை இஸ்லாமியர்கள் நடத்தினர். இந்த போராட்டம் மிக மோசமான மதவன்முறையாக வெடித்தது.
இதனையடுத்து மத மோதலில் ஈடுபட்டவர்கள் என இஸ்லாமியர்கள் சிலரை அடையாளப்படுத்தி அவர்களது வீடுகளை புல்டோசர்கள் மூலமாக உ.பி. அரசு இடித்து தரைமட்டமாக்கியது. இது மிகப் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜமியத் உலேமா ஏ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ். போபண்ணா, விக்ரம்நாத் ஆகியோர் பெஞ்ச் முன்பாக இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் போது உ.பி.யில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உரிய விதிகளை பின்பற்றி இடிக்க வேண்டும்; உரியவிதிகளை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அனுமதிக்க முடியாது. உ.பி.யில் வீடுகளை இடித்தது தொடர்பாக 3 நாட்களில் மாநில அரசு விளக்கம் தர வேண்டும். மேலும் உத்தரப்பிரதேசத்தில் வீடுகளை இடிக்க இடைக்கால தடை விதிக்க முடியாது; அதேநேரத்தில் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆக்கிரமிப்புகளை அகற்றவும் கூடாது என நீதிபதிகள் அறிவுரை வழங்கினர்.












Click it and Unblock the Notifications