எஸ்சி, எஸ்டி.யினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு கோரும் வழக்கு-தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
டெல்லி: அரசு பணிகளில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான (எஸ்.சி, எஸ்.டி) பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதில் உள்ள தடைகளை நீக்கக் கோரி மாநில அரசுகள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது.
இட ஒதுக்கீடு தொடர்பாக மண்டல் கமிஷன் வழக்கு அல்லது என்கிற இந்திராணி சஹானி vs மத்திய அரசு வழக்கு, நாகராஜ் vs மத்திய அரசு வழக்கு, ஜர்னைல் சிங் vs லஷ்மி நரேன் குப்தா மற்றும் பிறர் வழக்கு ஆகியவை முக்கியமானவை. இந்திராசஹானி என்கிற மண்டல் கமிஷன் வழக்கில்தான் நாடு முழுவதும் தற்போது பின்பற்றப்படுகிற இடஒதுக்கீடு நடைமுறைக்கான விதிகள் உருவாக்கப்பட்டன.
அலுவல் ரீதியாக அனுப்பிய கடிதம் விவாதப்பொருளாக மாறியுள்ளது - இறையன்பு விளக்கம்
நாகராஜ் வழக்கு தீர்ப்பு
2006-ம் ஆண்டு நாகராஜ் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பானது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதாவது ஒரு பிரிவினர் பின்தங்கியவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கான தரவுகள், ஒரு பிரிவினர் பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கின்றனர் என்பதற்கான தரவுகள் தேவை என வலியுறுத்தியது இந்த தீர்ப்பு. மேலும் எஸ்சி, எஸ்டி பிரிவினர்கூட பின்தங்கியிருக்கிறார்களா என்பதை தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்ய வேண்டும் என்றது இந்த தீர்ப்பு. பொதுவாக எஸ்.சி, எஸ்.டி என்றாலே தாழ்த்தப்பட்ட்டவர்கள், போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதவர்கள் என கருதப்படும் நிலையை இந்த தீர்ப்பு முடிவுக்கு கொண்டுவருவதாக இருந்ததால் விவாதமானது.
ஜர்னைல்சிங் வழக்கு தீர்ப்பு
பின்னர் ஜர்னைல்சிங் வழக்கில் 2006-ல் நாகராஜ் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய கோரியது மத்திய அரசு. ஆனால் 2018-ல் ஜர்னைல்சிங் வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் என்றாலே பின்தங்கியவர்கள்தான் அதற்கு தரவுகள் தேவை இல்லை என்றது. மேலும் இடஒதுக்கீடு தொடர்பான உத்தரகாண்ட் மாநில அரசின் வழக்கில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகள் முடிவு செய்யலாம். ஆனால் ஒரு பிரிவினர் பின்தங்கி இருக்கிறார்களா என்பதை உறுதி செய்ய தரவுகள் தேவை என்றது.
மாநில அரசுகளின் மனுக்கள்
இதனால் எஸ்.சி., எஸ்.டி.யினருக்கு பதவி உயர்வு வழங்குவதில் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. ஆகையால் இந்த குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் உச்சநீதிமன்றத்தில் பல மாநிலங்கள் மனுத்தாக்கல் செய்தன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வந்தது. கடந்த மாதம் 16-ந் தேதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான முந்தைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க முடியாது. பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம். அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு ஆலோசனைகளையோ, உத்தரவுகளையோ பிறப்பிக்க முடியாது. பதவி உயர்வு வழங்குவதில் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினர் பின் தங்கியுள்ளனரா என்பதற்கான புள்ளி விபரங்களின் அடிப்படையில் செய்வதா அல்லது பதவிகளில் உரிய பிரதிநிதித்துவம் உள்ளதா என்ற அடிப்படையில் செய்வதா என்பது குறித்துமாநில அரசுகளே முடிவு செய்யலாம். அதில், ஏதேனும் தடைகளோ அல்லது இடயூறோ இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அதனை விசாரிக்கும் என்றனர் நீதிபதிகள்.
நீதிபதிகள் சொன்னது என்ன?
பின்னர் கடந்த 5-ந் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய தரவுகளின் அடிப்படையில் முதலில் பணி உயர்வில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டதா என்பதை முதலில் விசாரிப்போம் என்று நீதிபதிகள் கூறினர். கடந்த வாரம் இந்த வழக்கில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்தது.
தீர்ப்பு ஒத்திவைப்பு
அந்த பிரமாண பத்திரத்தில், ஆண்டு செயல் திறனை மதிப்பீடு செய்துதான் பதவி உயர்வே வழங்கப்படுகிறது. தொடர்புடைய துறைகளில் பதவி உயர்வுக் குழுவானது பதவி உயர்வுக்கான அதிகாரிகளின் தகுதியை தீர்மானிக்க வேண்டும். இதனால் தகுதியற்றவர்கள் யாருக்கும் பதவி உயர்வு வழங்கப்படுவது இல்லை. மத்திய அரசின் கீழ் சுமார் 90 அமைச்சகங்கள் அல்லது துறைகள் உள்ளன. இவற்றின் கீழ் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 44 அமைச்சகங்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி சுமார் 3,800 பதவிகள் மொத்தமாக உள்ளன. ஒவ்வொரு பதவிக்கும் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருப்பவர் இடஒதுக்கீடு பட்டியலை பராமரிக்கிறார் என தெரிவித்தது. அதாவது எஸ்.சி, எஸ்.டியினருக்கு பதவி உயர்வுகளில் இடஒதுக்கீடு வழங்கலாம் என மத்திய அரசின் வாதம் இருந்தது. இந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.