பக்ரீத் நெருங்கும் நிலையில்.. பீட்டா செய்யுற வேலையை பாருங்க.. பிரதமருக்கு கடிதம்
டெல்லி: தியாகத் திருநாள் பக்ரீத் பண்டிகைக்கு பல்வேறு விலங்குகளை பலியிடுவது வழக்கம். ஆனால் மத வழிபாடுகளில் விலங்குகளை பலியிடுவதை தடுக்க வேண்டும் என்று, பீட்டா அமைப்பு, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது.
இறைவனுக்காக மகனையே பலியிட முன்வந்த இறைதூதர் இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் பக்ரீத் கொண்டாடப்படுகிறது. அப்போது, மாமிசங்களை, ஏழை, எளியோருக்கும், அண்டை வீட்டாருக்கும் கொடுப்பது இஸ்லாமியர்கள் பழக்கம்.
ஜூலை 20ம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட உள்ள நிலையில், பீட்டா அமைப்பு தற்போது, பிரதமருக்கு இப்படி ஒரு கடிதத்தை எழுதியுள்ளது.

மத வழிபாடுகளுக்காக அனுமதி
மிருகவதை தடுப்பு சட்டம் 1960 இன் பிரிவு 28 படி, மதம் சார்ந்த விஷயங்களுக்காக எந்த விலங்கையும், எந்த வகையில் வேண்டுமானாலும் கொல்ல அனுமதி தரப்பட்டுள்ளது, இதை நீக்க வேண்டும் என்று பீட்டா கேட்டுள்ளது.

பிரதமருக்கு கடிதம்
"பீட்டாவில் 20 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளனர். அவர்கள் சார்பாக, மிருகவதை தடுப்புச் சட்டம் 1960 பிரிவு 28ஐ நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன்"என்று பீட்டா அமைப்பின், இந்தியாவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி மணிலால் வள்ளியே பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

இந்திய கொள்கைகள்
மேலும் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: பிரிவு 28 என்பது" அஹிம்சை"," கருணை " உள்ளிட்ட இந்திய மரபுக்கு எதிராக உள்ளது. இந்திய அரசியலமைப்பின் பிரிவு 51 ஏ அனைவருக்கும் இங்கு வாழ சம உரிமை இருக்கிறது எனக் கூறுகிறது. எனவே விலங்குகளை கொல்வது அதற்கு எதிரானது.

நவீன சமுதாயம்
இந்த விதிமுறை (பிரிவு 28) மிருகவதை தடுப்பு சட்டத்தின் நோக்கத்திற்கு எதிரானது. ஏனெனில் இது "விலங்குகளுக்கு தேவையற்ற வேதனையையும் துன்பத்தையும் ஏற்படுத்துகிறது, இப்போது நவீன சமுதாயத்தில் வாழ்கிறோம். எனவே இதுபோன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டாம். மனிதனை பலியிட்டால் அதை கொலை என்று கருதுவது போலவே, விலங்குகளின் கழுத்தை அடிப்பது, தலையை துண்டிப்பது, கழுத்தை அறுத்து கொல்வது போன்றவையும் கருதப்பட வேண்டும். தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை விலங்குகள் முழுமையாக அறிந்திருக்கும்போதே, இவ்வாறு பலியிடப்படுகிறது.

பல மாநிலங்கள்
ஏப்ரல் மாதத்தில் இந்திய விலங்கு நல வாரியத்திற்கு (AWBI) தனது பரிந்துரைகளை பீட்டா சமர்ப்பித்துள்ளது. விலங்குகளை பலியிடுவதற்கு தடை விதிக்க நாங்கள் கோரிக்கை விடுத்துள்ளோம். குஜராத், கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பொது மத வழிபாட்டுத் தலங்கள் அல்லது அதன் சுற்றுப்புறங்களில் விலங்குகளை பலியிடுவதை தடை செய்துள்ளன.

சட்டப் பிரிவை நீக்க கோரிக்கை
இந்தியா முழுவதும் இதேபோன்ற தடையை அமல்படுத்துவதற்கு முற்போக்கான நடவடிக்கைகள் தேவை. 1960 ஆம் ஆண்டின் மிருகவதை தடுபபு சட்டத்திலிருந்து பிரிவு 28 ஐ நீக்குவதன் மூலம் இதை எளிதில் அடைய முடியும்.
இரக்கமும் அன்பும் எல்லா மதங்களின் மையக் கருத்தாகும். மேலும் எந்த மதமும் விலங்குகளுக்கு கொடுமை செய்ய ஊக்குவிக்கவில்லை. எனவே பிரிவு 28ஐ நீக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு பீட்டா தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications