ஓஹோ.. இப்போதான் புரியுது.. ஷாகின் பாக் போராட்டமே பாஜக ஏற்பாடுதான்.. ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு
டெல்லி: குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக டெல்லி, ஷாகின் பாக் பகுதியில் போராடியவர்களில் மூன்று பேர் பாஜகவில் இணைந்துள்ளனர். இதை கடுமையாக விமர்சனம் செய்துள்ள ஆம் ஆத்மி கட்சி, டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பாஜக உருவாக்கியது ஷாஹின்பாக் சக்கரவியூகம் என்று தெரிவித்துள்ளது.
டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா மற்றும் கட்சியின் தேசிய துணைத் தலைவர் ஷியாம் ஜாஜு முன்னிலையில் சமூக ஆர்வலர்கள் ஷாஜாத் அலி, டாக்டர் மெஹ்ரீன் மற்றும் தபஸ்ஸம் உசேன் ஆகியோர் நேற்று முன்தினம் பாஜகவில் இணைந்தனர்.
சில மாதங்களுக்கு முன்னர், ஷாஜாத் அலி ஷாஹீன் பாக் நகரில் போராட்டக்காரர்களுடன் சேர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) மற்றும் தேசிய குடிமக்களின் பதிவேடு (என்ஆர்சி) ஆகியவற்றிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலம் பொன்னானது.. தேவ கவுடா நெகிழ்ச்சி
திட்டம்
ஷாஜாத் அலி அளித்த பேட்டியில் "பாஜக முஸ்லிம்களின் எதிரி அல்ல என்பதை நிரூபிக்க" தான் கட்சியில் சேர்ந்தேன் என்றார். இது குறித்து ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: பாஜகவால் வகுக்கப்பட்ட சக்கரவியூகம் தான் ஷாஹின்பாக். எந்த கட்சிக்கு எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினார்களோ, அதே கட்சியில் அவர்களால் எப்படி இணைய முடியும்.
ஏமாறாத மக்கள்
இந்து ஓட்டுக்களை ஒரே பக்கம் திருப்பி தங்களிடம் கொண்டு வருவதற்காக ஷாகின்பாக் போராட்டத்தில், முஸ்லிம்களுக்கு ஆதரவாகவும், இந்தியாவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்ப வைத்துள்ளார்கள். எனவேதான், இந்தியாவுக்கு எதிராக கோஷம் எழுப்பியவர்கள் மீது காவல்துறை இதுவரை நடவடிக்கை எடுக்காமல் இருந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்துவதற்காக பாஜக உருவாக்கிய சக்கரவியூகம்தான் இது. ஆனால் மக்கள் ஏமாறவில்லை. ஆம் ஆத்மி கட்சியை திரும்பவும் தனிப்பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மக்கள் பிரச்சினை பேசவில்லை
குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை பிரச்சினைகள் இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக டெல்லி தேர்தலின்போது ஷாஹின்பாக் பிரச்சினை கிளப்பப்பட்டது. எந்த தலைவர் எந்த விஷயத்தை பேச வேண்டும் என்று பாஜக திட்டம் வகுத்து கொடுத்து, முழுக்க முழுக்க மதம் தொடர்பான மட்டுமே பிரச்சாரத்தின்போது பேசப்பட்டது. மக்கள் சார்ந்த பிரச்சினைகளைப் பேசவில்லை.
53 பேர் பலி
இத்தனை வியூகங்கள் வகுத்த போதிலும் டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்தது. ஆனால் ஷாஹின்பாக் போராட்ட திட்டத்தின் மூலம் 18 சதவீதமாக இருந்த தனது வாக்கு வங்கியை 38 சதவீதமாக அதிகரித்துள்ளது பாஜக. இப்படி தேர்தலுக்காக செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த போராட்டத்தால் 53 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
Recommended Video
ஷாகின் பாக் போராட்டம்
டெல்லியில் பாஜக வெல்ல முடியவில்லை என்றதும் ஷாஹின்பாக் போராட்டமும் முடிவுக்கு வந்துவிட்டது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஷாஹின்பாக் பகுதியில் போராட்டம் ஆரம்பித்தது. குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள்தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிராக இந்த போராட்டம் நடைபெற்றது. 100 நாட்கள் போராட்டம் தொடர்ந்த நிலையில், ஊரடங்கு காரணமாக மார்ச் 24ம் தேதி காவல்துறை இந்த போராட்டத்திற்கு அனுமதி மறுத்து முடித்து வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.