"அழுவதா சிரிப்பதா தெரியல".. ப.சிதம்பரத்தை தடுத்த போலீஸ்.. நிர்மலா சீதாராமன் மீது கடும் விமர்சனம்!
டெல்லி; பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் கருப்பு உடையணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஜிஎஸ்டி உயர்வு குறித்த மத்திய நிதியமைச்சரின் கருத்துக்கு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லையென காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை விமர்சித்து போராட்டத்தில் இறங்கியுள்ள காங்கிரஸ் கட்சி தலைவர்களை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தை தொடங்கிய காங்கிரஸ் கட்சியினர், குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நாடு முழுவதும் கட்சியினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 18ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆரம்பம் முதலே விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி, வேலையில்லா திண்டாட்டம், அக்னிபாத், அமலாக்கத்துறை ரெய்டு, என பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின. ஆனால், மத்திய அரசு இது குறித்து விவாதம் நடத்த அனுமதி மறுத்து வந்தது. இதனையடுத்து, ஏற்பட்ட அமளியில் காங்கிரஸ் எம்.பிக்கள் 4 பேர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஆனால், எதிர்க்கட்சிகளின் தொடர் போராட்டத்திற்கு பின்னர் சஸ்பெண்ட் மீண்டும் திரும்பப்பெறப்பட்டது.
இந்நிலையில் நேற்று மற்றும் அதற்கு முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக யங் இந்தியா அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர். இதனையடுத்து யங் இந்தியா அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. சோனியா காந்தி, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கு அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டது. அதேபோல் நாடாளுமன்றத்தில் கலந்துகொண்டிருக்கும் போதே காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் வழங்கியது. சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் மத்திய அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்காக பயன்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் கட்சியினர் மேற்குறிப்பிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று போராட்டத்தில் இறங்கினர். கருப்பு உடையணிந்து வந்த கட்சி உறுப்பினர்கள் மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக டெல்லியில் ஜந்தர் மந்தர் பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. ஜந்தர் மந்தரை தவிர டெல்லியின் பிற இடங்களில் போராட்டம், தர்ணா நடத்த அனுமதி இல்லை எனவும் டெல்லி காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டதைத் தொடங்கி குடியரசுத் தலைவர் மாளிகை வரை பேரணியாக செல்ல முற்பட்டனர்.
ஆனால், டெல்லி காவல்துறை இந்த போராட்டத்துக்கு அனுமதி மறுத்து, துணை ராணுவப் படையினருடன் சேர்ந்து விஜய் சவுக் சாலை மற்றும் நாடாளுமன்றத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்லும் பாதையில் தடுப்புகளை ஏற்படுத்தி போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அங்கேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி-க்களை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில் பங்கேற்றிருந்த மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்ட நிலையில் வலுகட்டாயமாக வாகனத்தில் ஏற்றப்பட்டார். வாகனத்திலிருந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "மக்களவையில் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜிஎஸ்டி வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்படவில்லை என்று கூறினார். இதைக்கேட்ட எங்களுக்கு அழுவதா சிரிப்பதா என தெரியவில்லை. எரிபொருள், சமையல் எண்ணெய், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்படவில்லையா? இதுமட்டுமல்லாது, பென்சில், அழிரப்பர், பால், வெண்ணெய், தயிர் போன்ற உணவு பொருட்களின் மீதும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கப்படவில்லையா? நிதியமைச்சர் வரலாறு குறித்து பேசுகிறார். பொருளாதாரத்தை பற்றி அல்ல" என குற்றம்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "நிதியமைச்சர் வரலாற்று ஆசிரியராக இருந்திருக்க வேண்டும். நிதியமைச்சராக இருந்திருக்கக்கூடாது. வேலையின்மை அதிகரித்துள்ளது. நுகர்வு குறைந்துள்ளது. பெண்கள் மத்தியில் அனீமீயா எனப்படும் ரத்தசோகை அதிகரித்திருக்கிறது. குழந்தைகளையும் இந்த மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் பாதித்துள்ளது. இதற்கு எதிராகத்தான் போராட்டம் நடத்திகொண்டிருக்கிறோம். எங்களை தடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மூலம் போராட்டம் நடத்தும் எங்கள் உணர்வுகளை மழுங்கடிக்க செய்ய முடியாது" என்று கூறியுள்ளார்.