டெல்லி கலவரம்.. சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பெயர் துணை குற்றப்பத்திரிக்கையில் சேர்ப்பு!
டெல்லி: டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த கலவரம் தொடர்பாக டெல்லி போலீஸ் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் பெயர் இந்த வழக்கின் துணை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்து வந்த சிஏஏ போராட்டம் பெரிய கலவரமாக உருவெடுத்தது. டெல்லியின் வட கிழக்கு பகுதியில் நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 54 பேர் பலியானார்கள். 50க்கும் அதிகமான வீடுகள் தீ வைக்கப்பட்டது.

100க்கும் அதிகமான வாகனங்கள், கடைகள் கொளுத்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது இந்த கலவரம் குறித்து டெல்லி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்த கலவரம் தொடர்பாக மொத்தம் 715 எப்ஐஆர் பதியப்பட்டுள்ளது.
இந்த கலவரம் தொடர்பாக பின்ஞ்ரா டோட் என்ற இயக்கத்தை சேர்ந்த தேவங்கணா கலிதா, நடாஷா நார்வல் மற்றும் ஜாமியா மிலியா பல்கலை மாணவி குல்பிஷா பாத்திமா உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் தற்போது சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பெயர் இந்த வழக்கின் துணை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் ஒரே மாதிரியான வாக்குமூலம் கொடுத்தனர். இதன் அடிப்படையில் இந்த துணை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல் ஸ்வராஜ் அபியானின் தலைவர் யோகேந்திர யாதவ் மீதும் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியர் அபூர்வாநந்த், இயக்குநர் ராகுல் ராய், பொருளாதார நிபுணர் ஜயதி கோஷ் ஆகியோர் மீது துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கலவரம் ஏற்பட இவர்கள் காரணமாக இருந்ததாக இந்த துணை குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி போலீசின் இந்த செயல் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.அதில், டெல்லி போலீஸ் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. பாஜக தலைமையின் நேரடி உத்தரவின் பெயரில் டெல்லி போலீஸ் இது போன்ற தவறான, நீதிக்கு புறம்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
முக்கிய கட்சிகளின் அமைதியான போராட்டங்களை பார்த்து அரசு பயப்படுகிறது. தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து எதிர்கட்சிகளை பழிவாங்க மத்திய அரசு நினைக்கிறது என்று சீதாராம் யெச்சூரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications