இன்று மமதா செய்தார்.. அதேபோல அன்று மோடி, ஜெயலலிதா செய்தனரே.. டிவிட்டரில் ஒரு விவாதம்!
டெல்லி: குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மன்மோகன்சிங் கூட்டிய தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை மோடி புறக்கணித்தார்; அதே பாணியில் மோடியின் ஆய்வு கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பங்கேற்காதது பெரிய குற்றமா? என சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் சேத விவரங்களை பிரதமர் மோடி நேற்று பார்வையிட்டு ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதற்காக கொல்கத்தாவுக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார்.
ஆனால் மேற்கு வங்க முதல்வரான மமதா பானர்ஜி, மோடி வருகை தந்த பின்னர் 20 நிமிடங்கள் தாமதமாகவே அவரை சந்தித்தார். இதனால் மோடி காத்திருக்க வேண்டியதாயிற்று.
மோடி ஆய்வு கூட்டம்- மமதா புறக்கணிப்பு
அத்துடன் மோடியை சந்தித்து புயல் சேத விவர அறிக்கையை கொடுத்துவிட்டு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காமல் சென்றுவிட்டார் மமதா. இது நாடு தழுவிய அளவில் பெரிய சர்ச்சையாகிவிட்டது. இதனால் கோபம் அடைந்த மத்திய அரசு, மேற்கு வங்க தலைமை செயலாளரை மத்திய அரசு பணிக்கு அழைத்துள்ளது.
ஜெ.மோடி புறக்கணிப்பு
மமதா பானர்ஜியின் நடவடிக்கையை பாஜகவினர் பலரும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். அதேநேரத்தில் மமதாவின் ஆதரவாளர்களோ, அவரது நடவடிக்கையை நியாயப்படுத்துகின்றனர். அத்துடன் பல ஆண்டுகளுக்கு முன்னர் சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டுகின்றனர். 2011-ம் ஆண்டு தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அந்த கூட்டத்தை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, குஜராத் முதல்வராக இருந்த மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், பஞ்சாப் முதல்வராக இருந்த பாதல் ஆகியோர் புறக்கணித்தனர்.
ஜெயலலிதா வெளிநடப்பு
2012-ம் ஆண்டு டெல்லியில் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தாம் பேசிக் கொண்டிருந்த போது முடித்து கொள்ள மணி அடித்ததால் கோபம் அடைந்தார் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. அதனால் அவர் தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் இருந்தே வெளிநடப்பும் செய்தார்.
2013-ல் மோடி புறக்கணிப்பு
2013-ம் ஆண்டு குஜராத் முதல்வராக இருந்தார் மோடி. அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்டத்தை மீண்டும் கூட்டியிருந்தார். அந்த கூட்டத்தை மோடி புறக்கணித்திருந்தார். அதாவது பிரதமர் கூட்டிய கூட்டத்துக்கு மாநில முதல்வராக இருந்த போகவில்லை. அதேபோல் சத்தீஸ்கர் முதல்வராக இருந்த ரமன்சிங்கும் பங்கேற்கவில்லை.
மமதா மீது மட்டும் தவறா?
தற்போது இந்த சம்பவங்களைக் குறிப்பிட்டு முதல்வர்களாக இருந்த மோடி, ஜெயலலிதா உள்ளிட்டோர் செய்தால் அது சரி... அதையே மமதா பானர்ஜி முதல்வராக இருந்து செய்தால் தவறா? அதுவும் மோடியை சந்தித்து அறிக்கையையும் கொடுத்துவிட்டுதானே போனார் மமதா? இதில் என்ன தப்பு கண்டுபிடிக்கிறீர்கள்? என கொந்தளிக்கின்றனர் மமதாவின் ஆதரவாளர்கள். சமூக வலைதளங்களில் இதுதான் ஹாட் டாபிக்.