மல்யுத்த வீரர் சாகர் கொலைக்குப் பின் ஹரித்வாரில் பிரபல யோகா குரு ஆசிரமத்தில் பதுங்கிய சுஷில்குமார்!
டெல்லி: சக மல்யுத்த வீரர் சாகர் கொலைக்குப் பின்னர் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் பிரபலமான யோகா குருவின் ஆசிரமத்தில்தான் மல்யுத்த வீரர் சுஷில்குமார் பதுங்கி இருந்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்போது சுஷில்குமார் சிக்கிய நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அந்த பிரபல யோகா குருவும் சிக்குவாரா? அவரது ஆசிரமம் சீல் வைக்கப்படுமா? என்பது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய மல்யுத்த வீரரான சுஷில்குமார் ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் பெற்றவர். டெல்லியில் அண்மையில் சக மல்யுத்த வீரரான சாகர் தன்கெட் தரப்புடன் சுஷில்குமார் தரப்பு மோதலில் ஈடுபட்டது.

சாகர் தன்கெட் மரணம்
இம்மோதலின் போது சாகர் தன்கெட்டும் அவரது நண்பர்களும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காத நிலையில் சாகர் தன்கெட் மே 4-ந் தேதி மரணம் அடைந்தார். இதனையடுத்து சுஷில் குமார் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஹரித்வார் யோகா ஆசிரமத்தில் பதுங்கல்
ஆனால் சுஷில்குமாரும் அவரது சகாக்களும் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். இதனிடையே மே 6-ந் தேதி மீரட் எக்ஸ்பிரஸ் சாலையில் கார் ஒன்றில் சுஷில் குமார் பயணம் செய்யும் வீடியோ ஊடகங்களில் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஹரித்வாரில் பிரபல யோகா குரு ஒருவரது ஆசிரமத்தில்தான் சுஷில் குமார் தஞ்சம் அடைந்திருப்பதும் அங்கே பதுங்கி இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

இடைவிடாமல்
இதனையடுத்து மே 7-ந் தேதி டெல்லிக்கு திரும்பிய சுஷில்குமார் அங்கிருந்து ஹரியானாவுக்கு தப்பிச் சென்றார். போலீசார் தம்மை தேடி வருவதை அறிந்த சுஷில்குமார் எங்கேயும் ஒரு இடத்தில் தங்காமல் தப்பி ஓடிச் சென்று கொண்டே இருந்தார்.

சிக்குவாரா யோகா குரு?
சண்டிகரில் இருந்து பதின்டா, கயாவில், குருகிராம் என சுஷில் குமார் ஓட்டம் தொடர் கதையாகவே இருந்தது. இருந்தபோதும் இடைவிடாமல் பின் தொடர்ந்த டெல்லி போலீசார் சுஷில்குமாரை இன்று கைது செய்தனர். சுஷில்குமாருக்கு அடைக்கலம் கொடுத்த ஹரித்வார் யோகா குரு சிக்குவாரா? அல்லது தப்புவாரா? என்பது பெரும் எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications