தாலிபான் ரிட்டர்ன்.. இந்தியாவிற்குத்தான் ஆபத்து.. எச்சரித்த ஆப்கான்.. மூக்கை நுழைக்கும் ரஷ்யா!
டெல்லி: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கி இருப்பது இந்தியாவிற்கும் ஆபத்தாக முடியும் என்று ஆப்கானிஸ்தான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தாலிபான்கள் எழுச்சி உலக நாடுகளுக்கு எல்லாம் பாதுகாப்பு சிக்கலை ஏற்படுத்தும் என்று ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது.
Recommended Video
ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபான்கள் கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின் அங்கு மீண்டும் தாலிபான்கள் ஆட்சி உருவாகும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வரும் நிலையில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்தி வருகிறது.
கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட மாவட்டங்களை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டது. மீதம் 100 மாவட்டங்கள் மட்டுமே தாலிபான் அரசு வசம் தற்போது உள்ளது.

ஆபத்து
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வளர்ச்சி என்பது இந்தியாவிற்கும் உலகிற்கும் ஆபத்து ஏற்படுத்தும் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் அரசு விடுத்துள்ள எச்சரிக்கையில், பாகிஸ்தானின் உதவியுடன் தாலிபான்கள் வளர்ந்து வருகிறது. ஆபகானிஸ்தானுக்கு எதிராக தாலிபான்களுக்கு பாகிஸ்தான் ராணுவ பயிற்சியை அளித்து வருகிறது. அவர்களின் படைகளையும் அனுப்பி வருகிறது.

எதிர்த்து
தாலிபான்கள், பாகிஸ்தான் படைகள் இரண்டையும் நாங்கள் எதிர்த்து வருகிறோம். நாங்களும் இழந்த பகுதிகளை வேகமாக மீட்டு வருகிறோம். தாலிபான்களின் வளர்ச்சி பாதுகாப்பு ரீதியாக இந்தியாவிற்கும் எதிரானது. இந்தியாவின் பாதுகாப்பிற்கும், காஷ்மீர் பிரச்சனையிலும் இந்தியாவிற்கு எதிராக தாலிபான்கள் வளர்ச்சி திரும்பும் வாய்ப்புகள் உள்ளது.

தீவிரவாதம்
தாலிபான்கள் இப்படி வளர்வது ஆசிய நாடுகளில் தீவிரவாத தாக்குதல்களை அதிகரிக்கும். பல நாடுகளுக்கு தாலிபான்களின் வளர்ச்சி பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது. ஆப்கான் எம்பி மரியம் சொலன்மான்கில் உட்பட பலர் இது தொடர்பாக இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிலைப்பாடு
இந்த தாலிபான் பிரச்சனையில் இந்தியாவின் நிலைப்பாடு தொடக்கத்தில் இருந்தே அமைதியின் பக்கமே இருக்கிறது. தாலிபான்களுக்கு இந்தியா எங்கும் நேரடியாக ஆதரவு அளித்தது இல்லை. நேற்று நடந்த ஷாங்காய் கோ ஆபரேஷன் மீட்டிங்கில் கூட இந்தியா இதே கருத்தை முன் வைத்தது. ஆப்கானிஸ்தானில் அமைதி வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

ஆயுதம்
அங்கு ஆயுதத்தை பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த கூடாது. தீவிரவாதத்திற்கு நாங்கள் ஆதரவு தர முடியாது. எந்த மாற்றமும் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நடக்க வேண்டும். இரண்டு தரப்பும் ஆரோக்கியமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். ஆப்கானிஸ்தான் மீண்டும் முன்பு இருந்த மோசமான நிலைக்கு செல்வதை இந்தியாவும் விரும்பாது, ஆப்கானிஸ்தான் அரசும், மக்களும் விரும்பாது.

மாற்றம்
இதுவரை செய்யப்பட ஒப்பந்தங்களை மதித்து இரண்டு தரப்பும் அமைதிக்கு வழிவகுக்க வேண்டும். ஆயுத மோதலை நிறுத்த வேண்டும், என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசி இருக்கிறார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கட்டுப்படுத்த தொடங்கி உள்ள நிலையில் தாலிபான்களின் ஆயுத பயன்பாட்டை எதிர்க்கும் விதமாக அவர் இப்படி பேசி இருக்கிறார்.

என்ன
இடையில் தாலிபான்களுடன் இந்தியா ரகசிய பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் எஸ்சிஓ கூட்டத்தில் தற்போது இந்தியா தாலிபான்களை வெளிப்படையாக எதிர்த்துள்ளது. இந்த நிலையில்தான் ரஷ்யா இதில் தலையிட்டுள்ளது. தாலிபான்களை தீவிரவாத இயக்கம் என்று சொல்ல முடியாது. லெபனானில் ஆயுதம் தாங்கிய ஹெஸ்புல்லா அமைப்பு எப்படி அரசியல் கட்சியாக மாறியதோ அப்படித்தான் தாலிபானும்.

ஹெஸ்புல்லா
ஹெஸ்புல்லா அமைப்பை பார்ப்பது போல தாலிபானையும் அரசியல் அமைப்பாக நடத்த வேண்டும். இந்தியா இதில் தனது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் அமைதிக்கு இந்தியா தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆப்கானிஸ்தானில் இனியும் வெளிநாட்டு சக்திகள் ஆதிக்கம் செலுத்த முடியாது. அவர்கள் நாட்டில் யார் ஆள்வது என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.

வெளிநாட்டு சக்திகள்
வெளிநாட்டு சக்திகள் இதை தீர்மானிக்க முடியாது என்று ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யா தாலிபான்களை ஆதரிக்கும் விதமாக இப்படி பேசி உள்ளது. இந்தியாவின் கருத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் ரஷ்யா இப்படி பேசி இருக்கிறது. தாலிபான் தீவிரவாத அமைப்பு கிடையாது, அதை எல்லோரும் ஏற்க வேண்டும், இந்தியாவும் ஏற்க வேண்டும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான் வளர்ச்சிக்கு பாகிஸ்தான், ரஷ்யா மறைமுகமாகவே ஆதரவு அளித்து வரும் நிலையில், இந்தியா அதை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications