பத்ம பூஷண் விருதுபெறும் வாணி ஜெயராம்.. தமிழகத்தின் வடிவேல் கோபால், மாசி சடையனுக்கு பத்மஸ்ரீ விருது!
டெல்லி: மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 26 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த பாம்புபிடி வீரர்களான வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவை அசரவைத்த தமிழர்கள்.. பத்மஸ்ரீ விருதுபெறும் வடிவேல் கோபால், மாசி சடையன்.. யார் இவர்கள்?
பத்ம பூஷண் அறிவிப்பு
அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மறைந்த மருத்துவர் திலீப் மஹாலானாபிஸுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைபாட்டுக்கு தீர்வு காணும் ஓ.ஆர்.எஸ்.கரைசலை கண்டுபிடித்த சாதனைக்குரியவர் மருத்துவர் திலீப். உத்தர பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவிற்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவர் கோபால்சாமி வேலுச்சாமிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நூலகர் மற்றும் சமூக சேவகருமான பாலம் கல்யாணசுந்தரத்துக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரதநாட்டியக் கலைஞர் கே கல்யாணசுந்தரம் பிள்ளைக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்ஆர்ஆர் இசையமைப்பாளருக்கு பத்மஸ்ரீ
இதனைதொடர்ந்து கலைத்துறை சேவைக்காக தமிழ்நாட்டை சேர்ந்த பாடகி வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர்ஆர்ஆர் திரைப்பட இசையமைப்பாளர் கீரவாணிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியை சேர்ந்த மருத்துவர் நளினி பார்த்தசாரதிக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாசி சடையன்
மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வானது குறித்து பாம்புபிடி வீரர் மாசி சடையன் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், இதுவரை எண்ணிலடங்கா பாம்புகளை பிடித்திருக்கிறோம். எப்போதும் கணக்கு வைத்துக் கொள்ள மாட்டோம். இந்த விருது பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.
வடிவேல் கோபால் மகிழ்ச்சி
தொடர்ந்து வடிவேல் கோபால் கூறுகையில், இந்த விருது பெறுவதில் மகிவும் மகிழ்ச்சியடைகிறோம். தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட ஏராளமான நாடுகளுக்கு சென்று பாம்பு பிடித்திருக்கிறோம். அதிக விஷத்தன்மை உள்ள பாம்புகளை பிடித்திருக்கிறோம். அதேபோல் இந்தியாவின் ஏராளமான மாநிலங்களுக்கு சென்று ஏராளமான பாம்புகளை பிடித்திருக்கிறோம். எங்களை பொறுத்தவரை ராஜநாகம் அதிக விஷத்தன்மை உள்ள பாம்புகள்.
விஷ முறிவு மருந்து
எங்கள் தந்தை காலத்தில் இருந்து பாம்பு பிடித்து வருகிறோம். இதுவரை கண்ணாடி விரியன், நல்ல பாம்பு உள்ளிட்ட ஏராளமான பாம்புகள் கடித்திருக்கின்றன. ஆனால் அதற்கான முன்னேற்பாடுகளுடன் இருப்போம். எங்களுக்கு பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று தெரிவித்தார். அதேபோல் இவர்கள் இருவரும் விஷ முறிவு மருந்துகள் கண்டறியவதிலும் பங்காற்றி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.