இப்போது முழு நாடும் கொரோனா பிடியில்.. மெத்தனமா இருந்தா அவ்ளோதான்.. மத்திய அரசு பகீர் எச்சரிக்கை!
டெல்லி: இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு நிலவியதுபோல் கொரோனா மீண்டும் உருப்பெற்றுள்ளது. மீண்டும் லாக்டவுன் போடப்படுமோ என்ற பீதி உருவாகியுள்ளது.
இந்த நிலையில் நாடு மீண்டும் கொரோனா ஆபத்தில் சிக்கியுள்ளதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்தார்.
அஜாக்கிரதை கூடாது
இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்றின் பிடியில் உள்ளது. அதாவது மோசமான நிலைமையில் இருந்து மிக மோசமான நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக சில மாநிலங்கள் கடந்த சில வாரங்களில் மிகவும் கவலையளிக்கும் நிலையில் உள்ளன. எந்த மாநிலமும், நாட்டின் ஒரு பகுதியும் மிகவும் அஜாக்கிரதையாக இருந்து விடக் கூடாது.
மகாராஷ்டிராதான் டாப்
அதிக கொரோனா பாதிப்பு கொண்ட முதல் 10 மாவட்டங்களில் 8 மாவட்டங்கள் மகாராஷ்டிராவில் உள்ளன. புனே (59,475 கொரோனா பாதிப்புகள்), மும்பை (46,248), நாக்பூர் (45,322), தானே (35,264), நாசிக் (26,553), அவுரங்காபாத் (21,282), பெங்களூரு நகரம் (16,259), நாந்தேட் (15,170) ), டெல்லி (8,032), அகமதுநகர் (7,952) ஆகிய மாவட்டங்கள் அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. நாம் கடுமையான மற்றும் தீவிரமான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ளோம்.
பாதிப்பு விகிதம் அதிகரிப்பு
தற்போது சில மாவட்டங்களில் கடுமை காணப்பட்டாலும், முழு நாடும் ஆபத்தின் பிடியில் சிக்கி கொள்ளும் நிலை உருவாகிறது. எனவே உயிரிழப்புகளை கட்டுப்படுத்தவும், உயிர்களை காப்பாற்றவும் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும். கடந்த வாரத்தில் நாட்டின் கொரோனா பாதிப்பு சராசரி விகிதம் 5.65 சதவீதமாக உள்ளது.
மகாராஷ்டிராவில் 23 சதவீத பாதிப்பு
மகாராஷ்டிராவில் சராசரி பாதிப்பு விகிதம் 23 சதவீதமாக உள்ளது. பஞ்சாப் 8.82%, சத்தீஸ்கர் 8.24%, மத்தியப் பிரதேசம் 7.82% , தமிழ்நாடு 2.5%, கர்நாடகா 2.45 சதவீதமாகவும் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு பிப்ரவரி 17 அன்று 5,493 ஆக இருந்தது. ஆனால் மார்ச் 24 அன்று இந்த எண்ணிக்கை 34,456 ஆக உயர்ந்துள்ளது. தினசரி உயிரிழப்பு பிப்ரவரி 10 அன்று 32 ஆக இருந்தது. மார்ச் 24 அன்று 118 ஆக அதிகரித்துள்ளது.
-பி.சி.ஆர் சோதனையை விரைவுபடுத்துங்கள்
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் ஆர்டி-பி.சி.ஆர் சோதனையை விரைவுபடுத்துமாறும், மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதிகளில் ஆன்டிஜென் பரிசோதனையையும் நடத்துமாறு மாநிலங்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். செவ்வாய்க்கிழமை காலை 10 மணி வரையிலான நிலவரப்படி நாட்டில் 6,11,13,354 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றார்.