திருக்குறளை சொல்லி மோடியை மாமன்னர் என்ற நிர்மலா.. தமிழக எம்பிக்கள், தேசிய எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
டெல்லி: திருக்குறளை சொல்லி மோடியை மாமன்னர் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டியதை தமிழக எம்பிக்களும் தேசிய எதிர்க்கட்சி எம்பிக்களும் கடுமையாக எதிர்த்தனர்.
2020- 2021-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். சுமார் 2.21 மணிநேரம் வாசிக்கப்பட்ட இந்த உரையில் பல்வேறு சலுகைகளையும் அறிவிப்புகளையும் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இவர் தனது உரையில் ஆத்திச்சூடி, திருக்குறளை மேற்கோள்காட்டி சில விஷயங்களை கூறியிருந்தார். அவர் திருக்குறளை மேற்கோள்காட்டிய போது பிரதமர் நரேந்திர மோடியை மாமன்னர் என்றார்.
"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து"
என்ற குறளை கூறி அதன் பொருளையும் விளக்கினார்.
அதாவது நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பமான வாழ்க்கை, நல்ல பாதுகாப்பு அல்லது காவல் ஆகிய 5 செல்வங்கள் மட்டுமே நாட்டிற்கு அழகு சேர்க்கும். எனவே திருக்குறளில் கூறியுள்ளபடி சிறப்பான ஆட்சியை பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார் என்றார். மேலும் மோடியை மாமன்னர் என புகழாரம் சூட்டினார்.
அப்போது தமிழக எம்பிக்களும், தேசிய எதிர்க்கட்சி எம்பிக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அது போல் சிந்து சமவெளி நாகரிகத்தை சரஸ்வதி நாகரிகம் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைத்ததால் தமிழக எம்பிக்களும் தேசிய எதிர்க்கட்சிகளின் எம்பிக்களும் கண்டனம் தெரிவித்தனர்.