டூல்கிட் வழக்கு: திஷா ரவிக்கு ஒருநாள் போலீஸ் காவல் - டெல்லி கோர்ட் அனுமதி
டூல்கிட் வழக்கு தொடர்பாக மேலும் ஒருநாள் திஷா ரவியிடம் விசாரணை நடத்த காவல்துறையினருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
டெல்லி: டூல்கிட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சூழலியல் ஆர்வலர் திஷா ரவியை ஒருநாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த காவல்துறையினருக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும்குளிர், மழையை பொருட்படுத்தாமல் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 90வது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாடு மற்றும் உள்நாட்டுப் பிரபலங்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக சுவீடனைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் டூல்கிட் லிங்க் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து, சூழலியல் ஆர்வலர் திஷா ரவி ட்விட்டரில் விவசாயிகள் போராட்டத்திற்கான ஆதரவை திரட்டும் வகையில் டூல்கிட் தயாரித்ததாக காவல்துறையினர் புகார் தெரிவித்தனர்.
பதஞ்சலி மருந்து கொரோனாவை தடுக்கும் என்றால்... தடுப்பூசி செலுத்தும் பணிகள் எதற்கு? ஐஎம்ஏ கேள்வி
இந்தியாவின் மதிப்பை கெடுக்கும் வகையில் டூல்கிட்டை உருவாக்கி மற்றவர்களுடன் பகிர்ந்தார் என கூறி டெல்லி காவல்துறையினர் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி திஷா ரவியை கைது செய்தனர். கைது செய்த திஷா ரவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்றம் அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தது.
அந்த காலக்கெடு கடந்த 20ஆம் தேதி முடிந்த நிலையில் மீண்டும் திஷா ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது திஷா ரவிக்கு மூன்று நாள் நீதிமன்ற காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், மூன்று நாள் காவல் முடிந்ததும் திஷா ரவி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது போலீசார் மேலும் 5 நாள்கள் விசாரணை நடத்த அனுமதி கோரினர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற ஆர்வலர்கள் நிகிதா ஜேக்கப் மற்றும் சாந்தனு முலுக் இருவருடன் திஷா ரவியிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் காவல்துறையினர் சார்பில் வாதிடப்பட்டது.
இதற்கு திஷா ரவியின் வழக்கறிஞர் சித்தார்த் அகர்வால் எதிர்ப்பு தெரிவித்தார்.சிறையில் கூட குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க போலீசாருக்கு உரிமை உண்டு. அவரை ஏன் போலீஸ் காவலில் எடுக்க வேண்டும் என்றும் அகர்வால் வாதிட்டார். அவரது ஜாமீன் மனு மீதான உத்தரவு செவ்வாய்க்கிழமை எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, மாணவி திஷா ரவியை ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி அனுமதி அளித்தனர். இதனிடையே திஷா ரவி ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள மனு மீது நாளை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.