44வது செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம்... தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி..!
டெல்லி: மாமல்லபுரத்தில் நடைபெறும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார்.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் சா்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற ஜூலை 28-ம் தேதியில் இருந்து ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை நடக்க விருக்கிறது. இதில் சர்வதேச அளவில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இந்தப் போட்டியை நடத்த தமிழக அரசு சார்பாக ரூ.92.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொடரை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்த சிறப்பு அதிகாரி தலைமையில் குழு அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகிறது.

இந்திய அணி
செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா தரப்பில் 4 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரு ஆடவர் அணிகள், இரு மகளிர் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட்மாஸ்டரான பிரக்ஞானந்தா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த அணிக்கு ஜாம்பவான் வீரரான விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

செஸ் ஒலிம்பியாட் ஜோதி
இந்தநிலையில் ஒலிம்பிக்கை போலவே செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு செஸ் ஒலிம்பியாட் ஜோதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் இந்தியாவில் தொடங்கி 75 நகரங்களுக்கு மக்கள் மத்தியில் கொண்டு செல்ல கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் செஸ் விளையாட்டை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலை நிகழ்ச்சி
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி மைதானத்தில் பிரம்மாணமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியாவின் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் வகையில், நடன கலைஞர்கள் பல்வேறு மாநிலங்களின் நடனங்களை அரங்கேற்றினர். அதுமட்டுமல்லாமல், வெளிநாட்டு வீரர்களை வரவேற்கும் வகையில், பல்வேறு நாட்டு கொடிகளுடன் சதுரங்க கட்டத்திற்குள் செய்து காட்டப்பட்ட நடன நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.

அறிமுகம் செய்த மோடி
இந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதனை இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள், இந்திய செஸ் கூட்டமைப்பு நிர்வாகிகள், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.












Click it and Unblock the Notifications