3.5 கோடி மக்களுக்கு வேலையில்லை.. மாதம் 20 லட்சம் பேர் வேலை இழக்கிறார்கள்.. இந்தியா நிலைமை இதுதான்
டெல்லி: அதிகரித்து வரும் கொரோனா பரவல் மற்றும், மத்திய அரசு போதிய அளவுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவற்றால், ரூ.30 லட்சம் கோடி மதிப்புக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியை, நமது நாடு இழக்க நேரிடும். வேலையில்லா திண்டாட்டம் பெரும் தலைவலியாக மாறக்கூடும் என்று எச்சரிக்கின்றன புள்ளி விவரங்கள்.
கொரோனா பாதிப்பையடுத்து, பெரும்பாலான ஆய்வாளர்கள் கணித்ததைவிடவும் இந்திய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது. எனவே தங்கள் மதிப்பீட்டை வல்லுநர்கள் மாற்றியமைத்து வருகின்றனர்.
உதாரணமாக, இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார பகுப்பாய்வு நிறுவனமான, கிரிசில் (Crisil) தனது மே மாத மதிப்பீட்டை மாற்றியுள்ளது. செப்டம்பர் மாத புதுப்பித்த அப்டேட்டில், பொருளாதார மந்த நிலை மேலும் மோசமாகியுள்ளதை சுட்டிக் காட்டியுள்ளது.
லாக்டவுன் காலத்தில் மரணம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இல்லை: மத்திய அரசு
இரு காரணங்கள்
இதற்கு இரண்டு முக்கிய காரணங்களை அந்த அமைப்பு கூறுகிறது: கொரோனா தொற்றுநோயின் உச்சநிலை இன்னும் இந்தியாவில் எட்டப்படவில்லை. மற்றும் அரசு போதுமான நேரடி நிதி ஆதரவை வழங்கவில்லை. எனவே, இக்காரணங்களால், எங்களது முந்தைய மதிப்பீட்டை மாற்றியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது கிரிசில்.
உள்நாட்டு உற்பத்தி
லாக்டவுனையடுத்து, அறிவிக்கப்பட்ட பொருளாதார பேக்கேஜ்படி கணக்கிட்டால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 1.2% க்கும் மேலாக அரசு செலவழிக்கும் என்று மே மாதத்தில் கிரிசில் எதிர்பார்த்தது. ஆனால் இது நடக்கவில்லை. இதன் விளைவாக, இந்தியா உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% நிரந்தர இழப்பை சந்திக்கும் என்று கிரிசில் மதிப்பிட்டுள்ளது. இது ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலுள்ள பிற நாடுகளின் 3% என்ற, சராசரி ஜிடிபி இழப்பை விட மிக அதிகம். அதாவது இந்த நாடுகளின் சராசரி இழப்பைவிட நமது நாட்டில் 10 சதவீதம் கூடுதல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ரூ.30 லட்சம் கோடி
பண மதிப்பு அடிப்படையில், இந்த இழப்பு சுமார் 30 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும். எளிமையாகச் சொன்னால், இந்த பொருளாதார சீர்குலைவு இந்தியாவிடமிருந்து ரூ.30 லட்சம் கோடியை கொள்ளையடிக்கும் என்று சொல்லலாம். இது 2020-21ம் நிதியாண்டு பட்ஜெட் தொகைக்கு இணையானது. ஆனால், ஆத்மனிர்பார் பாரத் அபியான் பேக்கேஜ் (தற்சார்பு இந்தியா) மூலம், பொருளாதாரத்தில் ரூ .3 லட்சம் கோடிக்கும் குறைவாகவே அரசு பங்களித்துள்ளது.
வேலையிழப்பு நிலவரம்
இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ் வியாஸ், ஆங்கில நாளிதழ் ஒன்றிடம் அளித்துள்ள பேட்டியில்,
இந்தியா எதிர்கொள்ளும் வேலைவாய்ப்பு சவால் எவ்வளவு கடுமையானது என்று விளக்கினார். இந்தியாவில் தற்போது 35 மில்லியனுக்கும் அதிகமான (3.5 கோடி) மக்கள் வேலையின்றி இருக்கிறார்கள். கொரோனா பரவியதற்கு பிறகு, சுமார் 2.1 கோடி வேலை இழக்கப்பட்டுள்ளன, இவை அவசரமாக மீட்கப்பட வாய்ப்பில்லை.
வேலைவாய்ப்பு
ஏற்கனவே 3.5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலையில், ஒவ்வொரு மாதமும், மேலும் 20 லட்சம் உழைக்கும் வயது மக்களை (அதாவது 15 வயது முதல் 59 வயது வரையிலானவர்கள்) இந்த பட்டியலில் சேர்க்கப்போகிறது. ஒரு வருடத்தில், இந்தியா சுமார் 9.6 மில்லியன் (சுமார் 1 கோடி) புதிய வேலைகளை உருவாக்க வேண்டும். எனவே இந்த நிதியாண்டின் முடிவில், மேலும் வேலைவாய்ப்புகள் இழக்கப்படாமல் தடுக்கப்படுவதோடு, இந்தியாவுக்கு புதிதாக 4.5 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்க தேவையுள்ளது. இப்போதைக்கு இந்தியாவின் முக்கிய தேவை, வேலைவாய்ப்புகளை பெருக்குவதுதான், இதற்கு, அரசு அதிக பொது நிதியை செலவிட தேவையுள்ளது.