ஆண்களைப் போல பெண்களுக்கும் இனி திருமண வயது 21... மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: ஆண்களைப் போல பெண்களுக்கும் இனி திருமண வயது 21 ஆக இருக்க வேண்டும் என்பதற்காக சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.
நாட்டில் தற்போது திருமண வயது ஆண்களுக்கு 21; பெண்களுக்கு 18 என்பதாக இருக்கிறது. இத்திருமண வயது என்பது 1995 இந்து திருமண சட்டத்தின் கீழ் வருகிறது.
இதனை மாற்றுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஜெயா ஜெட்லி தலைமையிலான நிதி ஆயோக் குழு அமைக்கப்பட்டு அக்குழு பரிந்துரைகளையும் வழங்கி இருந்தது.
எம்.பி.க்கள் சஸ்பெண்ட்.. நாகாலாந்து வன்முறை.. கடும் அமளிக்கு சாட்சியான நாடாளுமன்றம்
இதனடிப்படையில் இனி ஆண்களைப் போல பெண்களுக்கும் திருமண வயது 21 ஆக இருக்க வேண்டும் என்பது சட்டமாக்கப்பட உள்ளது. இது தொடர்பான மசோதா கொண்டுவர மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலேயே இதற்கான மசோதா கொண்டுவரப்பட உள்ளது.
டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில், பெண்களின் திருமண வயதை 18-லிருந்து 21-ஆக உயர்த்தும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது வரவேற்கத்தக்கது; மகிழ்ச்சியளிக்கிறது. பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும், எதிர்காலத்திற்கும் இந்த புரட்சிகர முடிவு உதவும்! உலக அளவில் இந்திய பெண்கள் நுண்ணூட்டச்சத்துக் குறைபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதற்கு இளம் வயது திருமணமும், தாய்மையும் தான் காரணம் ஆகும். பெண்கள் திருமணம் குறித்து முடிவெடுக்கும் பக்குவத்தை அடைய 21 வயது நிறைவடைய வேண்டியது அவசியமாகும்! இவற்றைக் கருத்தில் கொண்டு தான் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று நீண்ட காலமாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. கர்நாடக உயர்நீதிமன்றமும் பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த பரிந்துரை அளித்திருந்தது பெண்களின் திருமண வயதை 21-ஆக உயர்த்த வேண்டும் என்பதை பிரதமரும் கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருந்தார். இப்போது சட்டமே தயாராகி விட்டது. இதற்கான சட்ட முன்வரைவு நடப்புக் கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்பட்டால் அது பெண்களின் வாழ்வில் விடியலை ஏற்படுத்தும் என பதிவிட்டுள்ளார்.