என்னங்க இது? கிடுகிடுவென உயர்ந்த கோதுமை விலை.. ஓபன் மார்க்கெட்டில் ஏலம் விட மத்திய அரசு முடிவு!
கோதுமை விலை குறையாமல் தொடர்ந்து அதிகரிப்பதால் தற்போது இந்த கோதுமையை ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமையின் விலை சமீபத்தில் உயர்ந்திருப்பதால் அதனை குறைக்க மத்திய அரசு சில முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் கோதுமையின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. 2021-2022 என இந்த ஓராண்டு மட்டும் கோதுமையின் விலை சுமார் 23% அதிகரித்திருக்கிறது. அதாவது 2021ம் ஆண்டு கோதுமை ஒரு குவின்டால்(100 கிலோ) ரூ.2,212ஆக இருந்தது. இது கடந்த ஆண்டு ரூ.2,721 ஆக உயர்ந்திருக்கிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
இந்த விலையுயர்வுக்கு கோதுமை விளைச்சல் குறைவு காரணமாக சொல்லப்பட்டது. அதாவது 2021ம் ஆண்டை விட 2022ம் ஆண்டில் கோதுமை விளைச்சல் சுமார் 3 லட்சம் டன் அளவுக்கு குறைந்திருப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது. இதன் காரணமாக வரத்து குறைந்ததாகவும், எனவேதான் விலை உயர்ந்தது என்றும் அரசு சுட்டிக்காட்டியது. வட மாநிலங்களில் வீசிய வெப்ப அலையின் காரணமாக இந்த விளைச்சல் குறைந்ததாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தில் பாகிஸ்தான்.. கோதுமை லாரியை விரட்டிச் செல்லும் மக்கள்! பரிதாபம்
விலை
ஆக இப்படி சுற்றி சுற்றி கடைசியில் சாமானிய மக்கள் தலையில் இந்த விலையுயர்வு வந்து விழுந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஒரு கிலோ கோதுமை மாவின் விலை ரூ.23.7ஆக இருந்தது. இதே 2017ம் ஆண்டு ரூ.25.1 ஆகவும், 2020ம் ஆண்டு ரூ.29 ஆகவும் தற்போது 2023ம் ஆண்டு ரூ.33.3க்கும் கோதுமை மாவு விற்பனை ஆகிறது. அதேபோல ஆட்டா மாவும் 2016ம் ஆண்டு 25.1 ரூபாயாக இருந்தது. ஆனால் 2022ம் ஆண்டு இது 33.16 ரூபாயாக உயர்ந்தது. தற்போது ஒரு கிலோ ஆட்டா மாவு ரூ.37.8ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே இந்த தொடர் விலையுயர்வு மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த ஆண்டு கோதுமை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.
ஓபன் மார்கெட்
அப்படியும் விலை குறையாததால் தற்போது இந்த கோதுமையை ஓபன் மார்க்கெட்டில் விற்பனை செய்ய மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன்படி இந்திய உணவுக் கழகம் இந்த விற்பனையை இணையதளம் மூலம் தொடங்கும். அதாவது ஒரு குவிண்டால் கோதுமை் ரூ.2,350 என தனியாருக்கு ஏலத்தில் விடப்படும். அதிகம் ஏலம் கோருபவர்களுக்கு கோதுமை விநியோகிக்கப்படும். மட்டுமல்லாது இதற்கான போக்குவரத்து செலவை ஏலம் எடுப்பவர்கள்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இந்த திட்டத்திற்கு நேற்று(ஜன.25) மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஆட்டா
இப்படியாக மொத்தமாக சுமார் 30 லட்சம் டன் கோதுமை ஓபன் மார்கெட்டில் அரசு விற்கும். வாங்குபவர்கள் இந்த கோதுமையை ஆட்டாவாக மாற்றி ஒரு கிலோ ரூ.29.5 என்கிற விலையில் மக்களுக்க விற்பனை செய்ய வேண்டும். அதேபோல ஒரு தனி நபருக்கு 3,000 டன்கள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இது ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டுமே அனைத்து கோதுமையும் கிடைக்கும் என்கிற வாய்ப்பை தடுக்கும். அதேபோல பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டமைப்புகள், கேந்திரிய பந்தர் மற்றும் NAFED போன்ற அரசு நிறுவனங்களுக்கு இந்த கோதுமை ஏலமின்றி ரூ.2,350 என்கிற விலைக்கே அரசு கொடுக்கும்.
முயற்சி
இவ்வாறு கோதுமையை ஏலத்தில் எடுக்கும் தனியார் நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் தங்கள் வசிக்கும் நகரங்களில் இந்த கோதுமையை விநியோகிப்பதன் மூலம் கோதுமை தட்டுப்பாட்டையும், விலை உயர்வையும் குறைக்க முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. தற்போது இந்திய உணவு கழகத்தில் கோதுமையின் கையிருப்பு 158 லட்சம் டன்னாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.