நிதி குறைப்பு- மாநிலங்கள் தலையில் மத்திய அரசு திட்டங்கள்:நிர்மலா சீதாராமனுடன் மோதிய தங்கம் தென்னரசு!
டெல்லி: மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு தமது பங்களிப்பாக சொற்ப நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு மாநிலங்களின் தலையில் கட்டிவிடுகிறது என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.
டெல்லியில் பட்ஜெட்டுக்கு முந்தைய மாநில நிதி அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசியதாவது: மத்திய அரசின் நிதியுதவிடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதிச்சுமையை மாநில அரசுகளின் மீது மத்திய அரசு படிப்படியாக சுமத்தி வருகிறது.

பல்வேறு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் இன்றைய செலவினங்களின் அடிப்படையில் போதுமானதாக இல்லாததால், திட்டச் செலவினங்களில் பெரும்பகுதியை மாநில அரசுகள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
உதாரணமாக,
• பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புரம்) வீட்டுவசதி' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வீடு ஒன்றிற்கு 1.5 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது, அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிற்கு 12-14 இலட்சம் ரூபாயை தனது பங்களிப்பாக வழங்குகிறது.
• பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின்(கிராமப்புறம்) கீழ், மத்திய அரசு வீடு ஒன்றிற்கு 0.72 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கும் நிலையில் மாநில அரசு வீடு ஒன்றிற்கு 1.68 இலட்சம் ரூபாயை தன் பங்களிப்பாக வழங்கி வருகிறது.
•தேசிய சமூக நிதியுதவித் திட்டத்தின் கீழ், மத்திய அரசு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 200 ரூபாய் மற்றும் ஒவ்வொரு விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கும் மாதம் 300 ரூபாய் மட்டுமே தனது பங்களிப்பாக வழங்குகிறது. இத்தொகை கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமானதாக இல்லாததால், மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடு மாநிலமும் இத்தொகையை உயர்த்தி, இவ்வகையைச் சேர்ந்த ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியமாக 1,200 ரூபாயை வழங்குகிறது.
எனவே, தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது பங்களிப்பு தொகையை அதிகரித்து, மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களில் குறைந்தபட்சம் 50% பங்களிப்பை வழங்க வேண்டுமென ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றக்கூடாது என மத்திய அரசுக்கு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
அதற்குப் பதிலாக மத்திய அரசு கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை காப்பதற்காக, மாநில அரசுகளுடன் கூட்டாக இணைந்து, இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உதவ வேண்டும். இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.












Click it and Unblock the Notifications