லக்கிம்பூர் படுகொலை- மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஒரு கிரிமினல்- ராகுல், பிரியங்கா பொளேர் அட்டாக்
டெல்லி: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகளை காரை ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பிடிவாதம் காட்டுகின்றன. மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா ஒரு கிரிமினல் என மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கடுமையாக சாடியுள்ளனர்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது உ.பி. மாநிலம் லக்கிம்பூரிலும் விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டனர்.
அப்போராட்டங்களின் போது விவசாயிகள் மீது கார் ஏற்றியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. இச்சம்பவத்தில் 4 விவசாயிகள் துடிதுடித்து இறந்தனர். இச்சம்பவம் நாட்டை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை- மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி ராகுல் நோட்டீஸ்
சதித் திட்டம் அம்பலம்
இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து கடுமை காட்டிய பின்னரே மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 12 பேரை உ.பி. பாஜக அரசு கைது செய்தது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. இக்குழு தமது விசாரணை அறிக்கையில் லக்கிம்பூர் படுகொலை சம்பவம் ஒரு திட்டமிட்ட சதி; திட்டமிட்டபடுகொலை என்பதை அம்பலப்படுத்தியது.
டிஸ்மிஸ் கோரிக்கை
இந்த அறிக்கை இப்போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. லக்கிம்பூர் படுகொலை சதித்திட்டத்துக்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராதான் காரணம்; ஆகையால் அவரை பதவி நீக்கம் செய்தாக வேண்டும் என்று நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இது தொடர்பாக லோக்சபாவில் பேசிய மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா ஒரு கிரிமினல். அவர் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
பிரியங்காவும் அட்டாக்
இன்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் பிரதமர் மோடியை இவ்விவகாரத்தில் கடுமையாகத் தாக்கி இடைவிடாமல் ட்விட்டர் பக்கத்தில் பதிவுகளைப் போட்டு வருகிறார். பிரதமர் மோடி, ஒரு கிரிமினலைப் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாகவும் பிரியங்கா காந்தி கடுமையாகச் சாடியுள்ளார்.
மத்திய அரசு மவுனத்தால் கொந்தளிப்பு
இதனிடையே மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா மத்திய அரசு எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ள தயாராக இல்லை என்கின்றன டெல்லி தகவல்கள். என்னதான் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை முடக்கினாலும், கடுமையான நெருக்கடி கொடுத்தாலும் மத்திய அரசு, அஜய் மிஸ்ரா விவகாரத்தில் இறங்கி வராது என்கின்றன தகவல்கள். இத்தகவல்கள் எதிர்க்கட்சியினரை கடும் கொந்தளிப்புக்குள்ளாக்கி இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.