தலைநகரில் தொடரும் சோகம்... வேளாண் சட்டங்களை எதிர்த்து... மேலும் ஒரு விவசாயி தற்கொலை!
டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் போராடி வரும் இடத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை.. இவை இந்தியாவின் அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்காது என தற்கொலை செய்த விவசாயி கடிதத்தில் கூறியுள்ளார்.
வேளாண் சட்டங்களை எதிர்ப்பதற்காக உயிரை தியாகம் செய்கிறேன் என்றும் அவர் உருக்கமாக கடிதத்தில் தெரிவித்து உள்ளார்.
விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தலைநகர் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 6 கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வி
ஆனால் இதில் அனைத்திலும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நாளை நடைபெறுகிறது.வேளாண் சட்டங்களை திரும்ப பெரும் வரையில் போராட்டம் வாபஸ் இல்லை என்பதில் விவசாயிகள் உறுதியாக உள்ளனர். எனவே நாளை நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால், அடுத்தகட்டமாக போராட்டத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர்.
தொடரும் மரணம்
இந்த போராட்டத்தில் சில சோகமான சம்பவங்களும் நடந்து வருகிறது. சில விவசாயிகள் கடுங்குளிராலும், உடல்நலக்குறைவாலும் இறக்கின்றனர். சிலர் வேளாண் சட்டம் எதிர்ப்பு காரணமாக தற்கொலை செய்து கொள்கின்றனர்.
விவசாயி தற்கொலை
இந்த நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராடி வரும் இடத்தில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி-உ.பி. எல்லைக்கு அருகிலுள்ள காசிப்பூர் எதிர்ப்பு இடத்தில் காஷ்மீர் சிங் தாஸ் என்ற விவசாயி கழிவறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உருக்கமான கடிதம்
அவர் உத்தரபிரதேச மாநிலம் ராம்பூரில் உள்ள பஷியாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவார். நவம்பர் 28-ம் தேதி முதல் டெல்லியில் போராடி வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள், ஐந்து பேரக்குழந்தைகள் உள்ளனர். இறப்பதற்கு முன்பு காஷ்மீர் சிங் தாஸ் எழுதிய உருக்கமான கடிதத்தை போலீசார் கைப்பற்றினார்கள்.
ரத்து செய்யவில்லை
அதில் அவர் கூறியதாவது:- எனது மரணம் போராட்டத்தில் ஒரு பங்களிப்பாக இருக்கும். போராடுவதற்காகக் நான் டெல்லிக்கு வந்தேன். ஏனென்றால் வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லை.. இவை இந்தியாவின் அனைத்து விவசாயிகளுக்கும் பயனளிக்காது. இதனை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் விரும்புகிறார்கள். ஆனால் அரசு அவற்றை ரத்து செய்யவில்லை.
உயிர் தியாகம் செய்கிறேன்
இந்த போராட்டத்தில் பஞ்சாபில் இருந்து 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏற்கனவே இறந்துள்ளனர். ஆனால் உ.பி. மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த எந்த ஒரு விவசாயியும் உயிரைக் கொடுக்கவில்லை. ஆகவே வேளாண் சட்டங்களை எதிர்ப்பதற்காக உயிரை தியாகம் செய்கிறேன் எனறார்.
வேளாண் சட்டங்களை எதிர்ப்பதற்காக டெல்லியில் போராடி வந்த 2 விவசாயிகள் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.