கொரோனா 2.0? அதே வௌவால்கள்.. இந்த முறை ரஷ்யாவில் இருந்து! வேக்சின்கள் வேலை செய்யாது.. இது 'கோஸ்டா-2'
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையும் நிலையில், ரஷ்யாவில் வௌவால்களில் இருந்து புதிய வைரசை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றே பெரும் போராட்டத்திற்குப் பிறகு இப்போது தான் சற்று குறைந்து வருகிறது. கொரோனா வேக்சின் உள்ளிட்ட காரணங்களால் வைரஸ் பாதிப்பு பெரியளவு கட்டுக்குள் வந்துவிட்டது.
கொரோனா வைரஸ் கடந்த 2019இல் சீனாவில் பரவ தொடங்கி ஒட்டுமொத்த உலகத்தையே ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது தான் அதில் இருக்கும் பெரிய சிக்கல்
சென்னையில் மீண்டும் பரவும் கொரோனா..பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்.. மாநகராட்சி உத்தரவு
ரஷ்யா
இந்த கோவிட்-19 எப்படி உருவானது என யாருக்கும் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், வௌவாலில் இருந்து இந்த பாதிப்பு பரவியிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. கொரோனாவில் இருந்து இந்த உலகம் மெல்ல விடுபட்டுக் கொண்டிருக்கும் சூழலில், ஆய்வாளர்கள் கொரோனா போலவே இருக்கும் ஒரு புதிய வைரசை ரஷ்ய வௌவால் கண்டுபிடித்துள்ளனர்.. இது மனிதர்களைப் பாதிக்கக்கூடியது என்றும் தற்போதுள்ள வேக்சின்கள் இதற்கு வேலை செய்யாது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
'கோஸ்டா-2'
'கோஸ்டா-2' ('Khosta-2') என அழைக்கப்படும் இந்த வைரஸ், சர்பெகோவைரஸ் எனப்படும் கொரோனா வைரஸ்களின் துணை வகையின் கீழ் வருகிறது. உலகைக் கடந்த இரு ஆண்டுகளாக உலுக்கிய கோவிட்-19உம் இதே வகை தான் என்று வாஷிங்டன் மாநில பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர். வரும் காலத்தில் கொரோனா வைரஸ் போலப் பல வைரஸ் பாதிப்புகள் வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில் இந்த கண்டுபிடிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஒரே வேக்சின்
பில் கேட்ஸ் போன்றோர் அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் எதிராக வேலை செய்யக்கூடிய வகையில் ஒற்றை யுனிவர்சல் வேக்சின் உருவாக்க வேண்டும் எனச் சொல்லி வரும் நிலையில், இந்த புதிய 'கோஸ்டா-2' வைரஸ் பாதிப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. கொரோனா போலவே இந்த சர்பெகோவைரஸ்களும் சுவாசப் பாதைகளை அட்டாக் செய்யும் ஒரு வைரஸ் ஆகும். இதுவும் தொடர்ச்சியாக உருமாறிக் கொண்டே இருக்கும் பிரச்சினை இருக்கிறது.
அமெரிக்கா ஆய்வாளர்கள்
வாஷிங்டன் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர்கள் முதன்முதலில் 2020இல் ரஷ்ய வௌவால்களில் இந்த வைரசைக் கண்டுபிடித்தனர். ஆய்வாளர்கள் கோஸ்டா-1 மற்றும் கோஸ்டா-2 என இரு வகை வைரஸ்களை கண்டுபிடித்தனர். அதில் கோஸ்டா -1 மனிதர்களுக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை என்றாலும், கோஸ்டா -2 மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பாக இது மனித செல்களை பாதிக்கும் ஆபத்தைக் கொண்டு இருப்பதால் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்,
வேக்சின்
கொரோனா வேக்சின் தடுப்பூசிகளுக்கு இந்த கோஸ்டா-2 கட்டுப்படாது என்பதையும் ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். மேலும், ஆய்வாளர்கள் கூறுகையில், "மரபியல் ரீதியாக, இந்த வித்தியாசமான ரஷ்ய வைரஸ்கள் உலகில் வேறு சில இடங்களில் கண்டுபிடிக்கப்பட்ட சில வைரஸ்கள் போலவே இருந்தன.. ஆனால் அவை கொரோனா போல இல்லை. அவை இந்தளவுக்கு வித்தியமானதாக இருக்கும் என நாங்கள் நினைக்கவில்லை" என்றனர்.
பிரச்சினை
சமீப காலங்களில் பல சர்பெகோவைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை பெரும்பாலும் மனிதர்களைப் பாதிக்காது என்றே ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர், ஆசியாவில் உள்ள வௌவால்களில் கண்டறியப்படும் சர்பெகோவைரஸ்கள் பெரும்பாலும் மனிதர்களுக்குப் பிரச்சினை தராது என்ற போதிலும் ரஷ்யாவில் கண்டறியப்பட்டுள்ள இந்த வகை சர்பெகோவைரஸ்கள் மனிதர்களைப் பாதிக்கும் ஆபத்து உள்ளது.
வேக்சின்
கொரோனா வைரஸ் போலவே இந்த 'கோஸ்டா-2' வைரசும் தனது புரோத ஸ்பைக் மூலமே மனித செல்களில் பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு அழிக்கும். கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட ஆன்டிபாடிகள் இதற்கு எதிராக வேலை செய்கிறதா என்றும் ஆய்வாளர்கள் சோதித்துப் பார்த்து உள்ளனர். இருப்பினும், அவை வேலை செய்யவில்லை. எனவே, இந்த 'கோஸ்டா-2' வைரஸ் மனிதர்களுக்குப் பரவினால் கொரோனா போல மற்றொரு பெருந்தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம் என்றே ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.