பாதுகாப்பு குறைபாடிருந்தா அப்ரூவலே கொடுத்திருக்க மாட்டோம்.. இரண்டுமே 110 சதவீதம் சேஃப்.. டிசிஜிஐ
டெல்லி: கொரோனாவுக்கு எதிரான கோவிஷீல்டு , கோவாக்சின் ஆகிய இரு தடுப்பு மருந்துகளுமே 110 சதவீதம் பாதுகாப்பானது என இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோமானி தெரிவித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் அஸ்ட்ராஜெனகாவும் இணைந்து கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உருவாக்கியது. இந்த மருந்தை புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது.
அது போல் பாரத்பயோடெக் நிறுவனம் கோவாக்சின் எனும் தடுப்பு மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் சேர்ந்து உருவாக்கி வருகிறது. இந்த இரு தடுப்பூசிகளும் அவசர பயன்பாட்டுக்கு கொண்டு வர இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.

70 சதவீதம்
இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் டாக்டர் சோமானி கூறுகையில் இரு தடுப்பூசிகளுமே சோதனை அடிப்படையில் செலுத்தப்பட்டு சரி பார்க்கப்பட்டது. கோவிஷீல்டு தடுப்பூசி 23,745 பேருக்கு செலுத்தப்பட்டது. இது 70 சதவீதத்திற்கு மேல் செயல்திறன் கொண்டது.

கோவாக்சின்
கோவாக்சின் மருந்தும் பாதுகாப்பானது. இது நோய் எதி்ரப்பு சக்தியை அதிகரிக்கும். நபர் ஒருவருக்கு இரு டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பில் ஏதேனும் குறைபாடு இருந்திருந்தால் நாங்கள் அந்த மருந்துக்கு ஒப்புதல் அளித்திருக்க மாட்டோம்.

காய்ச்சல்
அவை இரு மருந்துகளுமே 110 சதவீதம் பாதுகாப்பானது. எந்த ஒரு தடுப்பு மருந்தை செலுத்தி கொள்வதால் காய்ச்சல், உடல்வலி, சோர்வு, ஒவ்வாமை ஆகியவை ஏற்படுவது சகஜம்தான். தடுப்பூசியை செலுத்தினார் ஆண்மைக் குறைபாடு ஏற்படும் என வதந்திகள் தவறானது.

மருந்து நிபுணர்கள் குழு
கெடிலா ஹெல்த் கேர் நிறுவனம் மற்றொரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசி 3ஆவது கட்ட சோதனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகளை முதலில் இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் கொரோனா வைரஸ் நிபுணர் குழு ஆய்வு செய்து பரிந்துரை செய்யும்.












Click it and Unblock the Notifications