ஆங்கிலேயரை எதிர்த்த முதல் வீராங்கனை. . தமிழ்நாட்டு வீரமங்கை வேலு நாச்சியாரின் வெற்றி வரலாறு!
புதுடெல்லி: இந்தியா தனது 75 வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், சுதந்திர போராட்டத்திற்கு முதன் முதலாக தொடங்கிய தமிழகத்தை சேர்ந்த வீரமங்கை வேலுநாச்சியாரை நாம் அறிந்து கொள்வது அவசியம் ஆகும்.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் வகையில் 'சுதந்திர தின அமுதப் பெருவிழா' (அம்ரித் மஹோத்சவ்) என்ற பெயரில் பல்வேறு விதமாக சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், நாட்டின் விடுதலைக்கு பங்கேற்றவர்களை இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம் ஆகும்.
ஐநா பாதுகாப்பு கவுன்சில்: இந்தியா நிரந்தர மெம்பராக 4 நாடுகள் ஆதரவு! சீனா எதிர்ப்பு! அமைச்சர் தகவல்!
ராணி வேலு நாச்சியார்
அந்த வகையில், இந்திய மண்ணில் முதன் முதலாக ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு தற்கொலை தாக்குதல் நடத்திய சுதந்திர போருக்கு விதை போட்ட வேலு நாச்சியார் குறித்து சிறப்பு தொகுப்பை இதில் நாம் காணலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 1730-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் பிறந்த வேலு நாச்சியார், முதல் சுதந்திர போருக்கு முன்பாகவே வெள்ளையரை எதிர்த்து போராடினார். இராமநாதபுரம் சமஸ்தானம் மன்னர் செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி - சக்கந்தி முத்தாத்தாள் தம்பதிக்கு ஒரே மகளாக வேலுநாச்சியார் பிறந்தார்
நாட்டை மீட்டெடுக்க சபதம்
பெண் சிங்கம் போல வேலுநாச்சியாரை அவரது தந்தை வளர்த்தார். வேலுநாச்சியார் ஆயுதப் பயிற்சி பெற்றார், பல மொழிகள் கற்று தேர்ந்தார். தனது 16 வது வயதில் அதாவது 1746-ம் ஆண்டு சிவகங்கைச் சீமை மன்னர் முத்துவடுகநாதத்தேவரை மணந்து கொண்டார். 1772-ம் ஆண்டு ஆற்காட்டு நவாப் மற்றும் ஐரோப்பியரின் படையெடுப்பால் கணவரை இழந்த வேலுநாச்சியார் நாட்டை மீட்டெடுக்க வேண்டும் என்பதில் திடமாக இருந்தார். ஆயுதங்களை கையாளும் பயிற்சி, வளரி, சிலம்பம், குதிரையேற்றம், வில்வித்தைகளில் கைதேர்ந்த வேலு நாச்சியார், ஹைதர் அலியைச் சந்தித்து உருது மொழியில் ஆங்கிலேயர் எதிர்ப்புப் பற்றிப் பேசி விளக்கினார்.
சாதுர்யமாக சிந்திக்கும் ஆற்றல்
வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட ஹைதர் அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார். ஏழாண்டு காலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம் மாறி மாறி முகாமிட்டு வாழ்ந்து வந்தார். வேலு நாச்சியாருக்கு 5,000 காலாட்படை மற்றும் 5,000 குதிரைப்படை மற்றும் ஆங்கிலேயர்களுடன் போரிடத் தேவையான ஆயுதங்களும் வழங்கப்பட்டன. போர் பயிற்சி பெற்ற பெண்கள் படையையும் வேலுநாச்சியார் உருவாக்கினார். சாதுர்யமாக சிந்திக்கும் ஆற்றல் கொண்ட வேலுநாச்சியார், தற்கொலை தாக்குதலை நடத்த திட்டமிட்டார்.
முதல் தற்கொலைப்படை தாக்குதல்
இந்த திட்டத்தை செயல்படுத்த ஆங்கிலேயர்களின் ஆயுதக்கிடங்கள் பற்றிய தகவலை பெற விரும்பினார். உளவுத்தகவல்கள் மூலம் ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கு பற்றிய தகவலை அறிந்து கொண்டு, அங்கு தற்கொலை தாக்குதலை செயல்படுத்த திட்டமிட்டார். ஆங்கிலேயரின் ஆயுதக்கிடங்கை அறிந்த பிறகு அதன் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தார் இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் தற்கொலைப்படை தாக்குதல் இதுவேயாகும்.
10 ஆண்டுகள் ஆட்சி
இந்த தற்கொலை தாக்குதலில் தனது நம்பிக்கையான தளபதி குயிலியையும் வேலுநாச்சியார் இழந்தார். ஆங்கிலேயரையும் ஆர்காட் நவாப்பையும் போரில் வென்ற வேலுநாச்சியார், அதன்பிறகு 10 ஆண்டுகள் வெற்றிகரமாக ஆட்சி செய்தார். 1796-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி வீரமங்கை வேலு நாச்சியார் மரணம் அடைந்தார். இந்திய சுதந்திர போராட்டத்திற்கு முதன் முதலாக தூபம் போட்ட வேலுநாச்சியார் தமிழர்களின் மனதில் மட்டும் அல்லாது இந்தியர்களின் எண்ணத்திலும் நீங்கா இடம் விட்டு சென்றுள்ளார்.