"97% மரணம்!" உயிருடன் இருக்கும் போதே மூளையை உண்ணும் அமீபா- அறிகுறிகள் என்ன? தற்காத்து கொள்வது எப்படி
டெல்லி: நமது அண்டை மாநிலமான கேரளாவில் இதுவரை 3 பேர் மூளையை உண்ணும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இது சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த மூளையை உண்ணும் அமீபா எப்படிப் பரவுகிறது.. இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன.. இதில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
அண்டை மாநிலமான கேரளாவில் சிறுவன் ஒருவன் மூளையை உண்ணும் அமீபா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தான். கேரளாவில் கடந்த 2 மாதங்களில் இந்த அமீபாவால் ஏற்படும் மூன்றாவது உயிரிழப்பு இதுவாகும்.

இந்த மூளையை உண்ணும் அமீபா ஏன் ஆபத்தானது, இதில் இருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் விரிவாகப் பார்க்கலாம்.
மூளையை உண்ணும் அமீபா: இந்த மூளையை உண்ணும் அமீபாவை ஆங்கிலத்தில் Naegleria fowleri என்று அழைப்பார்கள். இது ஏரிகள் மற்றும் ஆறுகள் போன்ற நன்னீர் சூழலில் தான் செழித்து வளரும்.. குறிப்பாக இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட வெப்ப மண்டல பகுதிகளில் அதிகமாக வளரும் செல் உயிரினமாகும். அசுத்தமான நீர்களில் இவை அதிகமாகவும் வேகமாகலும் வளரும்..
எப்படிப் பரவும்: அந்த நீரில் நீச்சல் அல்லது டைவிங் செய்யும் போது அந்த அசுத்தமான நீர் மூக்கு வழியாக உடலுக்குள் நுழையும் போது அது மனிதர்களைத் தாக்குகிறது. மூக்கு வழியாக நாசிப் பத்திகளுக்குள் நுழையும் இந்த அமீபா நேரடியாக மூளையைச் சென்று தாக்கக்கூடியவை.. அப்போது அது அரிதான பிஏஎம் எனப்படும் பிரைமரி அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் எனப்படும் அரிதான ஆனால் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த பிஏஎம் எப்போதும் ஆபத்தானது.. இது மூளை திசுக்களை அழித்து கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்: இந்த அமீபா நமது உடலுக்கு நுழைந்த சில நாட்களில் அறிகுறிகள் தென்பட தொடங்கும். தலைவலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி ஆகியவை முதற்கட்ட அறிகுறிகளாகும். அமீபா பாதிப்பு தீவிரமாகும் போது வலி, இல்லாத ஒன்றை இருப்பதாக உருவகப்படுத்தும் hallucinations, கோமா உள்ளிட்ட கடுமையான நரம்பியல் பிரச்சினைகளும் ஏற்படுகிறது.
இந்த அமீபா பாதிப்பால் ஏற்பட்டால் நோயாளி உயிர் பிழைப்பது கடினம். இந்த பாதிப்பு ஏற்பட்ட நோயாளிகளில் 97% பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாகவே இது மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கப்படுகிறது. அதேநேரம் இது மிக மிக அரிதாகவே பருவம் என்பதால் நாம் பெரியளவில் கவலைப்படத் தேவையில்லை.
எப்படித் தடுக்கலாம்: அசுத்தமான நன்னீரில் குளிப்பதை நிறுத்த வேண்டும். மேலும், நீச்சல் குளங்கள் உள்ளிட்டவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அசுத்தமான நன்னீர் பகுதிகளை அரசும் சுத்தப்படுத்த நடவடிக்கை எடுத்தால் இந்த அமீபா உருவாவது தடுக்கப்படும். இந்த அமீபா வெப்பம் அதிகம் இருக்கும் நன்னீரில் தான் உற்பத்தியாகும். எனவே, நன்னீர் ஏரிகள், ஆறுகள் மற்றும் கிணறுகளில் கோடைக் காலங்களில் நீச்சல் அடிப்பதை நிறுத்தவும். ஏனென்றால் நீங்கள் இங்கே நீந்த செல்லும் போது தான் அமீபா உங்கள் உடலுக்குள் நுழைகிறது.
நீர் சார்ந்த விளையாட்டுகளுக்குச் செல்லும் போது கூடுதல் கவனத்துடன் இருங்கள். நீச்சல் குளங்களைச் சுத்தமாக வைத்திருங்கள். இந்த அடிப்படையான விஷயங்களை மேற்கொண்டாலே போதும் மூளை உண்ணும் அமீபா பாதிப்பில் இருந்து நாம் எளிதாகப் பாதுகாப்பாக இருக்கலாம்.
மேலும், இந்த மூளையை உண்ணும் அமீபா கொரோனாவை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குக் காற்று உட்பட எதன் மூலமும் பரவாது. இதனால் இந்த கவலையும் தேவையில்லை. நன்னீர் மூலமாக மட்டுமே இவை நம்மைப் பாதிக்கக்கூடும் என்பதால் அங்கு மட்டும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications