"அவுட் ஆப் சிலபஸ்!" மாணவர் கேட்ட சப்ரைஸ் கேள்வி! உற்று பார்த்த பிரதமர்! அப்புறம் சொன்ன பதில் இருக்கே
விமர்சனங்களை எப்படி எதிர்கொள்வீர்கள் என்ற கேள்விக்குப் பிரதமர் மோடி அளித்த சுவாரசிய பதில் டிரெண்டாகி வருகிறது.
டெல்லி: தேர்வு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அதன்படி இந்தாண்டு நடந்த நிகழ்வில் விமர்சனம் குறித்து மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் மோடி நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தேர்தல் காலங்களில் மாணவர்கள் அதிகப்படியான அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தேர்வு காலத்தில் அதிக மார்க் பெற வேண்டும் என்று பெற்றோர் தொடங்கி பலரும் கொடுக்கும் அழுத்தமே இதற்குக் காரணம்.
இதனால் தேர்வு காலகட்டங்களில் மாணவர்களின் மனஅழுத்தம் அதிகமாக இருக்கிறது. சில நேரங்களில் எதிர்பார்த்த மார்க் பெற முடியவில்லை என்றால் என்னவாகுமோ என்று அஞ்சி விரும்ப தகாத முடிவுகளையும் மாணவர்கள் எடுத்து விடுகின்றனர்.
யாரும் நெருங்கக்கூட இல்லை.. 9 ஆண்டுகளுக்கு பிறகும் டாப் இடத்தில் பிரதமர் மோடி.. வெளியான புது சர்வே
பிரதமர் மோடி
தேர்வு முக்கியம் தான் என்றாலும் வெறும் ஒரு தேர்வு மாணவர்களின் எதிர்காலத்தை எப்போதும் தீர்மானித்து விடாது. தேர்வு காலங்களில் மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாகப் பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் தேர்வு காலங்களில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் உரையாடுவார். அப்போது பிரதமர் மோடி பல்வேறு விஷயங்கள் குறித்தும் மாணவர்களுக்கு அட்வைஸ் செய்வார்.
உரையாடல்
இந்தாண்டு அதேபோல மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். முந்தைய ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தாண்டு அதிகப்படியான மாணவர்கள் பிரதமரின் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளப் பதிவு செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சி நடந்த சுவாரசிய சம்பவம் தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்த நிகழ்வில் எதிர்க்கட்சிகள் விமர்சனம் குறித்து மாணவர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பிரதமர் நரேந்திர மோடி நகைச்சுவையாகப் பதிலளித்தார்.
அவுட் ஆப் சிலபஸ்
6ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த 'பரிக்ஷா பே சர்ச்சா' நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "இது அவுட் ஆப் சிலபஸ் கேள்வியாக இருக்கே" என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். பிரதமர் மோடியின் பதிலைக் கேட்டு அங்கிருந்த மாணவர்கள் அனைவரும் சிரித்துவிட்டனர். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, விமர்சனம் என்பது ஜனநாயகத்தில் சுத்திகரிப்பு போன்றது.. விமர்சனம் ஜனநாயகத்திற்குத் தேவை என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது" என்றார்.
விமர்சனங்கள் முக்கியம்
தொடர்ந்து விமர்சனங்களுக்கும் தேவையற்ற குற்றச்சாட்டுகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆக்கப்பூர்வமாக விமர்சிக்க வேண்டும் என்றார். மேலும், "நீங்கள் கடின உழைப்பாளி மற்றும் நேர்மையானவராக இருந்தால்.. விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், ஏனெனில் அவை உங்கள் பலமாகவே மாறும்.. மாணவர்கள் புற அழுத்தத்திற்கு ஆளாகாமல் கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியும்.
அம்மாவை பாருங்க
குடும்பத்திடமிருந்து எதிர்பார்ப்புகள் இயற்கையான ஒன்று தான்.. ஆனால் ஸ்டேடஸிற்காக குடும்பத்தினர் ஒன்றை எதிர்பார்த்தால், அது ஆரோக்கியமாக இருக்காது. அழுத்தங்களுக்கு அஞ்ச வேண்டாம். இலக்கில் கவனம் செலுத்திப் படிப்பைத் தொடருங்கள். மாணவர்களுக்குத் தேர்வு காலத்தில் மட்டுமின்றி அன்றாட வாழ்விலும் நேர மேலாண்மை முக்கியம். வேலைக்கு மட்டும் முன்னுரிமை கொடுங்கள். வீட்டில் அம்மாக்களைப் பாருங்கள்.. அவர்களைக் கவனித்தாலே, உங்கள் நேரத்தை எப்படிச் சரியாக நிர்வகிப்பது என்பது புரியும்" என்று அவர் தெரிவித்தார்.
ஸ்மார்ட் ஒர்க் அல்லது ஹார்ட் ஓர்க்
இதையடுத்து மாணவர் ஒருவர், "வாழ்க்கைக்கு ஸ்மார்ட் ஒர்க் முக்கியமா அல்லது ஹார்ட் ஓர்க் முக்கியமா" என்று கேட்டார். அதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "சிலர் புத்திசாலித்தனமாகக் கடுமையாக வேலை செய்வார்கள். சிலர் கடுமையாகப் புத்திசாலித்தனமாக வேலை செய்வார்கள்" என்று கமெடியாக பதிலளித்தார். இருப்பினும், தொடர்ந்து பேசிய அவர், "இதில் நாம் பல விஷயங்களைப் பார்த்தே முடிவெடுக்க முடியும். அந்த சூழலுக்கு என்ன தேவையே அதைப் பொறுத்தே வேலை செய்ய வேண்டும்" என்று கூறினார்,
கிரிக்கெட்
மேலும் பேசிய அவர், "மாணவர்கள் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்பதில் அதிக கவனம் செலுத்தக் கூடாது. உதாரணத்திற்கு கிரிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு கிரிக்கெட் பிடிக்கும் தானே.. கிரிக்கெட்டில் பேட்டிங் செய்பவர் தனக்கு வீசப்படும் பந்தில் மட்டுமே கவனம் செலுத்துவார்.. கூட்டத்திலிருந்து வரும் சத்தங்களை அவர் காதில் வாங்கிக் கொள்ள மாட்டார். மாணவர்களும் இதேபோல தங்கள் வேலையில் முழு கவனம் செலுத்த வேண்டும்" என்று பிரதமர் மோடி கூறினார்.