"தமிழகத்தில் களமிறங்கும் பிரதமர் மோடி?" எங்கு தெரியுமா! ஓபனாக பேசிய அண்ணாமலை! அதிமுக குறித்தும் பரபர
தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கான செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லி: ஈரோடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது முதலே தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதனிடையே பிரதமர் மோடி தமிழ்நாட்டில் போட்டியிடுவதாகத் தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து பாஜக தலைவர் அண்ணாமலை சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஏற்கனவே வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தைத் தொடங்கிவிட்டது. அதிமுக தரப்பில் இன்னும் சில காலத்தில் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ளார்.
அதேபோல இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடும் சில நாட்களில் தெரிந்துவிடும் என்றே கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஏஎன்ஐ ஆங்கில செய்தி நிறுவனத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த பேட்டியில் பல விவகாரங்கள் குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி ட்விஸ்ட்.. என்னது திமுகவில் சேரப்போகிறேனா? படபடத்த தேமுதிக வேட்பாளர் ஆனந்த்
அண்ணாமலை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, 2024 மக்களவை தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடலாம் என்று தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இது தொடர்பான கேள்விக்குப் பதிலளித்த அண்ணாமலை, "பிரதமர் நரேந்திர மோடி பிராந்தியங்களைத் தாண்டி செல்வாக்கு மிக்க தலைவராகவே உள்ளார். தமிழ்நாட்டில் அவரை வெளி நபராக மக்கள் பார்க்கவில்லை. தங்களில் ஒருவராகவே மக்கள் பார்க்கிறார்கள்" என்று அவர் தெரிவித்தார். பிரதமர் மோடி 2014 மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி மற்றும் குஜராத்தின் வதோதரா ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரண்டு இடங்களிலும் வெற்றி பெற்றார்.
தமிழ்நாட்டில் பிரதமர் மோடி?
வாரணாசியில் எம்பியாக தொடர்ந்த நிலையில், வதோதரா எம்பி பதவியை ராஜினாமா செய்தார். 2019இல் அவர் வாரணாசியிலிருந்து மட்டும் போட்டியிட்டார். அண்ணாமலை மேலும் கூறுகையில், "மோடிஜியை மக்கள் தங்களில் ஒருவராகவே பார்க்கிறார்கள்.. கடந்த ஒரு மாதமாகவே பிரதமர் மோடி தமிழ்நாட்டில் இருந்து போட்டியிடுவதாக இங்குத் தகவல் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. நான் எங்குச் சென்றாலும் இது குறித்தே கேட்கிறார்கள். இரு நாட்களுக்கு முன்பு நான் தூத்துக்குடிக்குச் சென்றிருந்தேன். அங்கு டீக்கடையில் என்னை பார்த்த ஒருவரும் இதையே கேட்கிறார்.
ராமநாதபுரத்தில்..
ராமநாதபுரத்தில் இருந்து அவர் போட்டியிடுவார் என்று வதந்திகள் பரவுகிறது. மக்களும் இது குறித்துப் பேசத் தொடங்கிவிட்டனர். இது எல்லாம் வதந்தி என்றாலும் மக்கள் இது குறித்து அதிகம் பேசுகிறார்கள்... மோடி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும் என்பதே அவர்கள் விருப்பமாக உள்ளது. மோடியை அவர்கள் எதோ ஒரு மாநிலத்தைச் சேர்ந்தவராகப் பார்க்கவில்லை. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கும் போது சாதி, தமிழ் சார்ந்த அடையாளம் எனப் பல விஷயங்கள் மக்கள் பார்க்கிறார்கள். ஆனால் மோடி அனைத்தையும் தாண்டிவிட்டார். தமிழ்நாட்டில் இதை வெற்றிகரமாகச் செய்த ஒரே நபர் அவர்தான். 2024 தேர்தல் வித்தியாசமான ஒன்றாகவே இருக்கும்.
பிரதமர் மோடி
மோடியை மக்களை ஒருங்கிணைப்பவர்.. மோடிக்குத் தனியாக ஒரு பிம்பம் உள்ளது. அவரிடம் இருக்கும் மந்திரம் ஒரு கலை அது வாக்குகளாக மாறும். அடுத்த 16-18 மாதங்களில் முக்கியமான விஷயம்.. நாங்கள் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம். களத்தில் இறங்கி வேலை செய்தால் நிச்சயம் தேர்தலில் வெல்வோம்" என்று அவர் தெரிவித்தார். இதற்கு முன்னரும் பல தேசிய தலைவர்கள் தென்மாநிலங்களில் போட்டியிட்டுள்ளனர். இந்திரா காந்தி 1978இல் சிக்கமகளூருரில் போட்டியிட்டார். 1980இல் இந்திரா காந்தி ஆந்திரப் பிரதேசத்தின் மேடக்கில் களமிறங்கினார். 1999இல் சோனியா காந்தி அமேதி, பெல்லாரி தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் இரண்டு இடங்களிலும் வெற்றி பெல்லாரியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிமுக கூட்டணி
அதிமுக உடனான கூட்டணி குறித்துப் பேசிய அவர், "நாங்கள் எந்த கட்சிக்கும், எந்தவொரு நபருக்கும் எதிரானவர்கள் இல்லை.. பாஜக வலுவாக இருக்க வேண்டும் என்பதில் மட்டுமே நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இது திமுகவைப் போல வெறும் வாக்குக்கான கூட்டணி அல்ல. மரியாதைக் கூட்டணி. அதிமுகவுடன் எங்களுக்குப் பல கருத்து வேறுபாடுகள் உள்ளன.. ஆனால் சில முக்கிய விஷயங்களில், நாங்கள் ஒருவருக்கொருவர் ஒத்துப்போகிறோம். தமிழ்நாட்டில் பாஜகவுக்குத் தனி அடையாளம் இருக்க வேண்டும் என்பதிலும் பிரதமர் மோடியின் புகழை வாக்குகளாக மாற்ற வேண்டும் என்பதிலும் உறுதியாக உள்ளோம்.
மோடி இமேஜ்
நாங்கள் வலுவான கூட்டணியை அமைக்கிறோம். மக்களின் இமேஜை மாற்ற விரும்புகிறோம். சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட தனித்துப் போட்டியிட்டோம். கட்சி மக்களிடையே எந்த இடத்தில் உள்ளது என்பதைக் கண்டறிய விரும்புகிறோம். உள்ளாட்சித் தேர்தல் சிறப்பாக அமைந்தது.. தமிழ்நாட்டில் பிரதமர் மோடிக்கு நல்ல இமேஜ் உள்ளது. அதைத் தமிழ்நாட்டில் வாக்குகளாக மாற்ற வேண்டியதே எங்கள் பணியாகும். தமிழ்நாட்டில் அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் பாஜகவுக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. அதை விரிவாக்கவே முயன்று வருகிறோம்.
கடந்த தேர்தல்
கடந்த தேர்தலில் எங்கள் கூட்டணி 19% வாக்குகளைப் பெற்றன. இதுவரை நாங்கள் பெற்ற வாக்கு சதவிகிதத்தில் இதுதான் அதிகம். கடந்த 2014 முதலே தமிழ்நாட்டில் பாஜகவுக்கான அலை இருந்து வருகிறது. 2017க்குப் பிறகு மாநிலத்தில் உள்ள சில கட்சிகள் திட்டமிட்டு மோடிக்கு எதிரான சில பொய் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். அவர் தமிழின உணர்வுகளுக்கு எதிரானவர் என்பது போன்ற பிம்பத்தைக் கட்டமைக்க முயன்றனர்.
வரும் தேர்தல்
ஆனால், இப்போது நிலைமை மாறி வருகிறது. கடந்த முறை பிரதமர் தமிழ்நாட்டிற்கு வந்த போது மக்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். ட்விட்டரில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பிரதமர் மோடியை வரவேற்றுப் பதிவிட்டிருந்தனர்.. மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இது அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தல் முடிவுகளில் நிச்சயம் எதிரொலிக்கும்" என்று அவர் தெரிவித்தார்.