"அம்மா கிட்ட சொல்லிடுங்க!" உயிர் போய்விடுமோ என அஞ்சிய பண்ட்! முதலில் சொன்ன வார்த்தைகள்! நெகிழ்ச்சி
டெல்லி: இந்திய நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் வெள்ளிக்கிழமை அதிகாலையில் கார் விபத்தில் சிக்கினார். இதற்கிடையே அவரை காப்பாற்றிய கார் ஓட்டுநர், அப்போது பண்ட் முதலில் என்ன சொன்னார்.. அப்போது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்திய நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் ஓட்டி வந்த கார் நேற்று முன்தினம் அதிகாலை விபத்தில் சிக்கியது. அவர் ப்ரோமோஷன் பணிகள் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது அதிகாலை நேரத்தில் விபத்து அரங்கேறியுள்ளது.
அங்கு கடும் குளிர் காரணமாகப் பனிமூட்டம் அதிகமாக இருந்துள்ளது. அதிகாலை நேரம் அங்கு அதிகமான பணி இருந்த நிலையில், பண்ட் தனது பென்ஸ் காரை அதிவேகமாக ஓட்டிவந்துள்ளார்.
பாஜகவின் 'துணிவு’ சேலஞ்ச்.. 1 டூ 1 ஃபைட்டுக்கு ரெடியாகும் அண்ணாமலை.. 4 பாயிண்டுகள்! பிளான் இதானா?
கார் விபத்து
அப்போது எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிரே இருந்த டிவைடரில் மோதியுள்ளது. இவை அனைத்தும் வெகு சில நொடிகளில் நடந்து முடிந்துவிட்டது. இடித்த வேகத்தில் கார் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர் ஜன்னல் வழியாக வெளியே வர உதவியுள்ளனர். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்குத் தீவிர பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்ற போதிலும், தலை மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பஸ் டிரைவர்
இந்தச் சூழலில் விபத்து நடந்த சமயத்தில் என்ன நடந்தது என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. அதவாது அதிகாலை நேரத்தில் விபத்து நடந்த உடன் அங்கே இருந்த பேருந்து ஓட்டுநரான சுஷில் என்பவர் உடனடியாக காருக்கு அருகே வந்துள்ளார். மேலும், போலீசாருக்கும் எம்ர்ஜென்சி போலீசாருக்கும் இவரே தகவல் கொடுத்துள்ளார். பண்ட்டிற்கு தக்க நேரத்தில் உதவிய இந்த நபர் சுஷில் என்ற 42 வயதான ஓட்டுநர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. பானிபட் டிப்போவில் ஹரியானா ஓட்டுநரான சுசீல் குமார் அப்போது ஹரித்வாரில் இருந்து பானிபட் நோக்கி 30-க்கும் மேற்பட்ட பயணிகளைத் தனது பேருந்தில் ஏற்றி வந்துள்ளார்.
விருது
அப்போது தான் இந்த விபத்தை அவர் பார்த்துள்ளார். விபத்தில் சிக்கியவர் யார் என்றே தெரியாத போதிலும், அவர் விரைந்து சென்று உதவியுள்ளார். மேலும், ஆம்புலன்ஸ் வாகனம் வரும் வரை வெயிட் செய்து ஆம்புலன்ஸிலும் ஏற்றியுள்ளனர். மேலும், அவரது விபத்தால் பணம் சிதறிய நிலையில், அதையும் ஆம்புலன்ஸில் அவர் ஏறும்போது கொடுத்துள்ளார். தக்க நேரத்தில் கார் கண்ணாடியை உடைத்து வெளியே வர உதவியதால் தான் பண்ட் உயிர் பிழைத்துள்ளார். இதற்காக அந்த டிரைவருக்கு விருதையும் அளிக்க உள்ளதாக உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது.
என்ன நடந்தது
மேலும், பலரும் சுஷில் குமாரை பாராட்டி வருகின்றனர். இந்தச் சூழலில் நேற்று காலை விபத்து நடந்த போது என்ன நடந்தது என்பது குறித்த தகவல்களை சுஷில் குமார் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், "நான் அதிகாலை 4.25 மணியளவில் பேருந்தை எடுத்தேன். காலை 5.15 மணியளவில் குருகுல் நர்சன் அருகே சென்றபோது, சுமார் 300 மீட்டர் முன்னால், ஒரு கார் அதிவேகமாக வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். கார் கட்டுப்பாட்டை இழந்தது போல் இருந்தது. சில நொடிகளில், அது ஒரு டிவைடரில் மோதி, தலைகீழாக கவிழ்ந்தது.
மோசமான விபத்து
எங்கு ஒரு நிமிடம், கார் எங்கள் பேருந்தில் மோதிவிடுமோ என்று பயந்தேன்... இதனால் உடனடியாக பஸ் வேகத்தைக் குறைத்து மோதலை தவிர்க்க வலது பக்கம் திருப்பினேன். உடனே உள்ளே இருப்பவருக்கு உதவ நான், நடத்துநர், சில பயணிகள் இறங்கினோம். அப்போது கார் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அது எந்த கார் என்று கூடச் சொல்ல முடியவில்லை... அந்தளவுக்கு மோசமான நிலையில் இருந்தது. விபத்தின் தீவிரத்தைப் பார்த்த போது, டிரைவர் உயிரிழந்திருப்பார் என்றே நினைத்தேன். நாங்கள் கார் அருகே சென்ற போது அவருக்கு ரத்தம் கொட்டியது, தலை, முதுகில் காயம் ஏற்பட்டிருந்தது.
சுயநினைவு இல்லை
நானும், நடத்துநரும் அவரை கஷ்டப்பட்டு காரில் இருந்து வெளியே இழுத்தோம். உடனடியாக அவசர உதவி எண்ணுக்குக் கால் செய்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். நாங்கள் அவரை காரில் இருந்து வெளியே எடுத்த போது அவருக்கு சுயநினைவே இல்லை.. அதன் பிறகு 2-3 நிமிடங்கள் கழித்துத் தான் அவர் சுயநினைவு பெற்றார். அப்போது அவர் என்னைப் பார்த்து, "நான் தான் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்" என்று கூறினார். எனக்கு அவர் யாரென்று தெரியவில்லை. நான் ஹரியானாவைச் சேர்ந்தவர். நான் கிரிக்கெட்டை பார்க்க மாட்டேன்.. கபடி தான் பார்ப்பேன். இதனால் அவர் யார் என எனக்குத் தெரியவில்லை..
முதலில் சொன்ன வார்த்தைகள்
நாங்கள் அவரிடம் முதலில் உங்களுடன் யார் வந்தது என்று தான் கேட்டோம். உள்ளே வேறு யாராவது இருந்தால் அவரை மீட்கக் கேட்டோம். ஆனால், அவர் தனியாகவே வந்ததாகச் சொன்னார். அவர் அச்சத்துடன் இருந்தார். எங்கு தான் உயிரிழந்துவிடுவோமோ எனப் பயந்தார். இதனால் அவர் உடனடியாக தனது அம்மாவுக்குக் கால் செய்யச் சொன்னார். ஆனால் அவரது மொபைல் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இதனால் கால் செய்ய முடியாமல் போனது. அவர் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.
நடுங்கினார்
இதையடுத்து பயணி ஒருவரிடம் இருந்து போர்வையை வாங்கி அவருக்குப் போர்த்தினோம். நடுங்கிக் கொண்டிருந்த அவர் அதிகம் பேசவில்லை. சிறிது நேரத்தில் போலீஸ் டீம் மற்றும் ஆம்புலன்ஸ் வந்தது. அவரை அனுப்பும் போதே, அவரது உடைமைகளையும் கொடுத்துவிட்டோம்" என்றார். இப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்டிற்கு சிறு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அவர் ஆபத்தான நிலையில் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.