கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்.. பழங்குடி பெண்ணை அறிவித்த பாஜக - யார் இந்த திரௌபதி முர்மு?
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள திரௌபதி முர்மு யார்? அவரது அரசியல் பயணம் என்ன என்பதை விரிவாக காண்போம்.
Recommended Video
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிப்பு
இதனை தொடர்ந்து வரும் ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.
பாஜக கூட்டணி வேட்பாளர்
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளராக 64 வயதான திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவரான திரௌபதி முர்மு பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர். இவர் குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டால் இந்தியாவின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெறுவார்.
யார் இந்த திரௌபதி முர்மு?
ஒடிசாவின் மாயுர்பஞ்ச் மாவட்டத்தில் கடந்த 1958 ஆம் ஆண்டு பிறந்த திரௌபதி முர்முவுக்கு நேற்றுதான் (ஜூன் 20) பிறந்தநாள். கடந்த 2017 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தலின்போதும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக இவரது பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால், பீகாரை சேர்ந்த ராம்நாத் கோவிந்த் கோவிந்துக்கு பாஜக தலைமை வாய்ப்பு வழங்கியது.
கவுன்சிலர் டூ ஜனாதிபதி வேட்பாளர்
ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள ரமா தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் படித்த இவர் ஆசிரியராக பணிபுரிந்தவர். 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் மற்றும் சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஒரு சாதாரண கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரௌபதி முர்மு 2 முறை ஒடிசா மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவி வகித்து இருக்கிறார்.
ஒடிசா மாநில அமைச்சர்
பாஜகவை சேர்ந்த இவர் கடந்த 2000 வது ஆண்டில் ஒடிசாவில் பாஜக, பிஜு ஜனதா தளம் கட்சி கூட்டணி ஆட்சி நடந்தபோது அமைச்சராக பதவியேற்றார். ஒடிசா மாநிலத்தில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும், அதைத் தொடர்ந்து மீன்வளம் மற்றும் விலங்குகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருக்கிறார்.
ஜார்க்கண்ட் ஆளுநர்
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் மூலம், ஒடிசாவிலிருந்து ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் மற்றும் முதல் பழங்குடியின ஆளுநர் என்ற அவர் பெருமையை பெற்றார். இந்த நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.