காங்கிரஸ் கட்சி ஏன் மோசமான நிலைமையில் இருந்து, படுமோசமான நிலைமைக்கு பாய்ந்து செல்கிறது தெரியுமா?
டெல்லி: காங்கிரஸ் கட்சி மோசமான நிலையில் இருந்து படு மோசமான நிலைமைக்கு கீழே போய்விட்டது என்பதைத்தான் குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டசபை தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிலேயே பழமையான அரசியல் கட்சியான காங்கிரசை வீழ்ச்சி பாதையில் இருந்து தூக்கிப் பிடிக்க இரண்டு முக்கிய முடிவுகள் தலைமையால் எடுக்கப்பட்டன.
அதில் ஒன்று 20 வருடங்களுக்கு பிறகு காந்தி குடும்பத்தை தாண்டி வேறு ஒருவர், அதாவது மல்லிகார்ஜுன் கார்கே, கட்சியின் தலைவர் ஆக்கப்பட்டார். இன்னொரு பக்கம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இருந்ததையும் இழக்கும் காங்கிரஸ்.. நொறுக்கிய பாஜக.. வரலாறு காணாத வெற்றியாம்! இந்தியா டுடே கணிப்பு
எக்சிட் போல்
இந்த இரண்டு டேமேஜ் கண்ட்ரோல் நடவடிக்கைகளுக்கு மத்தியில்தான் இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய இரண்டு மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெற்று முடிந்தன. நேற்றைய தினம் குஜராத் சட்டசபைக்கான இரண்டாவது கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்த பிறகு இரண்டு மாநிலங்கள் தொடர்பான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.
வீணான தந்திரம்
பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் இரண்டு மாநிலங்களிலும் பாஜக மறுபடியும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்று தான் அடித்து சொல்கின்றன. இதன் மூலம் காங்கிரஸ் தலைமை எடுத்த இரண்டு தந்திரங்களும் வீணாகி விட்டதாகவே தெரிகிறது.
தேர்தல் நேர கட்சியா காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சி உத்வேகத்தை இழந்து விட்டு வெறும் வியூகங்களை டெல்லியில் இருந்து வகுக்கும் கட்சியாக இருப்பதுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இரண்டு மாநிலங்களுமே காங்கிரசால் ஆட்சியைப் பிடிக்க தகுதியான மாநிலங்கள் என்ற போதிலும் அங்கு பெரிய பிரயத்தனம் எதையும் அந்த கட்சி செய்யவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு பிரச்சாரத்துக்கு செல்வது மட்டும் ஒரு கட்சி தலைமைக்கு அழகு கிடையாது. அந்தந்த மாநிலங்களில் உள்ள நிர்வாகிகளை பலப்படுத்துவது அவசியம் என்பதை இந்த கட்சி புரிந்து கொள்ளவில்லை. அப்படியே தப்பி தவறு ஏதாவது முயற்சிகள் எடுத்தால் அதை பாஜக முறியடித்து விடுகிறது. காங்கிரஸ் கட்சிகளிலிருந்து திடீர் திடீரென்று நிர்வாகிகள் பாஜகவுக்கு தாவுகிறார்கள். அதை தடுத்து நிறுத்தும் வல்லமை காங்கிரஸ் தலைமைக்கு இல்லை. தலைமை உத்வேகம் இல்லாமல் இருந்தால் பாவம் நிர்வாகிகள் என்னதான் செய்வார்கள் இப்படித்தான் நடக்கும்.
பிரியங்கா காந்தி vs மோடி
ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஆப்பிள் விவசாயிகள் ஆளும் பாஜக அரசு மீது அதிருப்தியில் இருந்தனர். பல்வேறு தரப்பினரும் அரசுக்கு எதிராக குரல்களை எழுப்பினர். ஆனாலும் அங்கு கூட காங்கிரஸ் வெற்றி பெற முடியாவிட்டால் தலைமையை குற்றம் சொல்வதை தவிர வேறு என்ன செய்ய முடியும் என்று கேட்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். உதாரணத்துக்கு, இமாசலப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி ஐந்து தேர்தல் கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றார். ஆனால் பிரதமர் பதவியில் இருக்கும் மோடி 18க்கு மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பங்கேற்றார் என்றால் யார் தேர்தலுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் என்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.
சசிதரூர் நிலைமையை பார்த்தீர்களா
இன்னொரு பக்கம் கட்சி நிர்வாகிகளை வலுப்படுத்துவதாக வேண்டிய காங்கிரஸ் தலைமையே அவர்களை பலவீனப்படுத்துகிறது. யார் வேண்டுமானாலும் காங்கிரஸ் தலைமைக்கு போட்டியிடலாம் என்று அறிவித்துவிட்டு தனது கை பாவையான மல்லிகார்ஜுன கார்கேவை தலைவராக வேண்டும் என்பதுதான் தலைமையின் விருப்பமாக இருந்தது. எனவே தான் எதிர்த்து போட்டியிட்ட சசிதரூர் கிட்டத்தட்ட இப்பொழுது காங்கிரஸ் கட்சியில் இருந்து ஊர் விலக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். ஆம் அதிகாரபூர்வமற்ற வகையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவருக்கு எதிராக கோபம் காட்டியுள்ளது தலைமை.
காங்கிரஸ் இல்லாத பாரதம்
நிர்வாகிகளை பலப்படுத்த மாட்டோம், பிரச்சாரத்திற்கு போக மாட்டோம் ஆனால் வெற்றி பெற்று விட வேண்டும் என்ற பண்ணையார் மனநிலையை விட்டு காங்கிரஸ் கட்சி வெளியே வரும் வரை இனிமேல் அதற்கு எதிர்காலம் இல்லை பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை உருவானால் அதை பயன்படுத்திக் கொண்டு கரையேறலாம் என்ற பழைய யோசனைகளும் இனிமேல் பயன் தராது. அந்த இடத்தை ஆம் ஆத்மி பிடிப்பதற்கு தயாராக இருப்பதை தேர்தலுக்குபிந்தைய கருத்துக்கணிப்பு பட்டவர்த்தனமாக காட்டுகிறது. டெல்லி மாநகராட்சியை ஆம் ஆத்மி கைப்பற்ற உள்ளது. ஏற்கனவே பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்றி விட்டது. குஜராத்தில் ஊடுருவி விட்டது. இனிமேலும் விழித்துக் கொள்ளாவிட்டால் காங்கிரஸ் இல்லாத பாரதம் உருவாகும் பாஜகவின் கனவை, காங்கிரஸ்தான் நனவாக்கும்.