காஷ்மீரில் 10,000 வீரர்கள் திடீர் குவிப்பு- தீவிரவாதிகள் பயங்கர சதி குறித்து பகீர் தகவல்!
ஸ்ரீநகர்: காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
லோக்சபா தேர்தலுக்கு பின் வரிசையாக காஷ்மீரை நோக்கி இந்திய ராணுவப்படை குவிக்கப்பட்டு வருகிறது. தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் உடனடியாக அப்போதே காஷ்மீர் எல்லைக்கு செல்லவும்படி அறிவுறுத்தப்பட்டார்கள்.
அப்போதே மொத்தம் 40 ஆயிரம் வீரர்கள் காஷ்மீர் எல்லையில் குவிக்கப்பட்டார்கள். தற்போது அங்கு தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
என்ன செய்தார்
இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன் மத்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் காஷ்மீர் சென்றார். அங்கு முக்கிய அதிகாரிகள், ராணுவ வீரர்கள், உளவுத்துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இரண்டு நாட்கள் நடந்த இந்த ஆலோசனையில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
என்ன குவிப்பு
அஜித் தோவல் டெல்லி வந்ததும் அதிரடி நடவடிக்கையாக, 10000 துணை ராணுவ படையினர் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டனர். காஷ்மீர் எல்லையில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இன்று கூடுதலாக பாதுகாப்பு படையினர் அங்கு அனுப்பபட உள்ளனர்.
என்ன விளக்கம்
இந்த நிலையில் காஷ்மீரில் தொடர்ந்து துணை ராணுவப் படையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருவது ஏன் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில், காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பு ஒன்று தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
என்ன முக்கியம்
மிக பெரிய தீவிரவாத தாக்குதல் நடக்க போவதாக உளவு தகவல்கள் வந்துள்ளது. இதை தடுக்கவே தற்போது அங்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளது. ரோந்து பணிகளும் அங்கு இதனால்தான் அதிகரிக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும், என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.