அரசியலமைப்பில் ஏது “மதசார்பின்மை”? அப்படி ஒரு “வார்த்தையே” இல்லை - ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்றம்
டெல்லி: மதசார்பின்மை என்ற வார்த்தையே உண்மையான அரசியலமைப்பில் இல்லை என ஹிஜாப் வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா கருத்து தெரிவித்து இருக்கிறார்.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
சிவசேனா யாருக்கு சொந்தம்? உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் இன்று விசாரணை
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மாணவி தரப்பு வழக்கறிஞர் காமத், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடினார். நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா, மத உரிமையை பள்ளி வரை எடுத்துச் செல்லலாமா என்று கேள்வி எழுப்பினார்.
வழக்கறிஞர் வாதம்
இந்த நிலையில் நேற்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்தது. அப்போது வழக்கறிஞர் காமத், அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, பிரிட்டன் நாடுகளில் நடந்த வழக்குகளை மேற்கோள் காட்டினார். அப்போது நீதிபதி குப்தா, சமூக, கலாச்சார சூழல்களை சார்ந்தே நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கப்படும். ஆடை அணிவது அடிப்படை உரிமை எனில், ஆடை அணியாததும் அடிப்படை உரிமையாக இருக்கும்." என்று கருத்து தெரிவித்தார்.
நீதிபதி கருத்து
அப்போது நீதிபதி ஹேமந்த் குப்தா, "மற்றவர்கள் பள்ளியில் சீருடை அணிந்திருக்கும்போது, தலையில் முக்காடு அணிகிறார்கள்." என்று கூறினார். அப்போது வழக்கறிஞர் காமத், தென் இந்தியாவை சேர்ந்தவர்கள் பள்ளிக்கு செல்லும்போது சந்தியா வந்தனம், பூணூல், ருத்ராக்ஷ போன்றவற்றை அணிவதாக தெரிவித்தார்.
பூணூல் விவாதம்
அப்போது குறிக்கிட்ட நீதிபதி ஹேமந்த் குப்தா, "பூணூல் என்பது சட்டைக்கு உள்ளே இருக்கிறது. யாரும் நமது சட்டையை கழற்றி உள்ளே இருப்பதை பார்க்க மாட்டார்கள். பூணூல் அணிவது பள்ளியின் ஒழுக்கத்தை மீறும் செயலாகாது. மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பில் இடம்பெறவில்லை." என்றார்.
மதசார்பின்மை
அப்போது வழக்கறிஞர் காமத், "மத அடையாளங்கள் அணிந்து செல்லக்கூடாது என்பது மதசார்பின்மைக்கு எதிரானது. நாங்கள் நேர்மறையான மதசார்பின்மையை ஏற்கிறோம். ஒரு மதத்தை சேர்ந்தவர்கள் மத அடையாளத்தை மறைக்க வேண்டும் என்பது மதசார்பின்மை இல்லை. நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றினால் நேர்மறை மதசார்பின்மையை அடையலாம்." என்று கூறினார்.
அரசியலமைப்பில் இல்லை
அப்போது குறுக்கிட்ட நீதிபதி துலியா, மதசார்பின்மை தொடர்பான உங்கள் வாதம் முடிந்ததா என்று கூறினார். மற்றொரு நீதிபதி ஹேமந்த் குப்தா, "மதசார்பின்மை என்ற வார்த்தை உண்மையான அரசியலமைப்பிலேயே இல்லை." என்றார். அப்போது வழக்கறிஞர் காமத், அரசியலமைப்பின் ஆன்மாவில் அது இருக்கிறது. முழு அரசியலமைப்பிலும் அதன் தாக்கம் உள்ளது. என்றார். உடனே நீதிபதி குப்தா, "நாங்கள் அந்த வார்த்தை பற்றி பேசுகிறோம். அது அரசியல் அறிக்கையாக சேர்க்கப்பட்டதா? என தெரியவில்லை." என்றார்.