இது இந்தியாவின் அதிசயம்.. ஈபிள் டவரையும் விட உயரமான ரயில் பாலத்தின் வியக்க வைக்கும் போட்டோ.. ஆஹா!
டெல்லி: ஈபிள் டவரை விட உயரமாகவும், உலகில் உள்ள உயரமான ரயில் பாலம் என புகழ்பெற்றுள்ள செனாப் ரயில் பாலத்தின் வியக்க வைக்கும் போட்டோக்களை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள முக்கிய போக்குவரத்தில் ரயில்வே முக்கியமானது. இந்தியாவில் நீண்டதூர பயணத்துக்கு வசதிப்படைத்தவர்கள் விமானத்தை பயன்படுத்தும் நிலையில் ஏழை, நடுத்தர மக்கள் அதிகம் நாடுவது ரயில்களை தான்.
இதனால் தான் இந்தியாவில் தவிர்க்க முடியாத ஒன்றாக ரயில் பயணங்கள் உள்ளன. மேலும் இந்தியாவில் சரக்கு போக்குவரத்தும் அதிகளவில் ரயில்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ரயில்வே துறையை நவீனமயமாக்கும் வகையில் ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஈபிள் டவரை விட உயரமான பாலம்
அந்த வகையில் தான் காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் செனாப் ரயில் பாலம் உருவாக்கப்பட்டது. உத்தம்பூர் , ஶ்ரீ நகர் , பாரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1486 கோடி செலவில் ரியாசி மாவட்டத்தின் கூரி பகுதியில் செனாப் நதியின் மேல் கட்டப்பட்டுள்ளது. செனாப் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாலம் ஆற்றில் தரைமட்டத்திலிருந்து 359 மீட்டர் உயரத்தில் 1315 மீட்டர் நீளத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இது உலக அதிசயங்களில் ஒன்றான பிரான்ஸ் நாட்டின் பாரீசில் அமைந்துள்ள 324 மீட்டர் உயரம் கொண்ட ஈபிள் டவரை விட உயரமானது என்பது சிறப்பம்சமாகும்.

இந்தியன் ரயில்வே வெளியிட்ட போட்டோக்கள்
மேலும் இந்த பாலத்தில் பயன்படுத்தப்பட்ட எஃகு குறைந்தபட்சம் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகபட்சம் 40 டிகிரி செல்சியஸ் வரையும் தாங்கும் திறன் கொண்டதாகும். இந்த செனாப் ரயில் பாலம் நிலநடுக்கத்தை ரிக்டர் அளவுகோலில் 8 வரை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது செனாப் ரயில் பாலம் மணிக்கு 266 கிமீ வேகத்தை தாங்கும் வகையில் வலுவாக உள்ளது. இதுதொடர்பான படங்கள் அடிக்கடி இணையதளங்களில் வெளியாகி மக்கள் மனதை கவரும். அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் செனாப் பாலத்தின் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிரமிக்க வைக்கும் போட்டோக்கள்
அதில் செனாப் பாலத்தின் வளைவை சுற்றி மேகக்கூட்டங்கள் திரண்டு நிற்கின்றன. 4 வெவ்வேறு ஆங்கிளில் இருந்து எடுக்கப்பட்ட இந்த படங்கள் மேகக்கூட்டங்களுக்கு இடையே பாலம் அமைக்கப்பட்டுள்ளதா? என வினா எழுப்பும் வகையில் அமைந்துள்ளது. காலையில் உதித்து மாலையில் மறைந்திடும் சூரியனின் இளஞ்சிவப்பு ஒளி பிரதிபலிக்கும் வகையில் ஒரு போட்டோ உள்ளது. மற்ற 3 படங்களும் செனாப் நதியை முழுவதுமாக மூடி வெள்ளை நிறத்தில் திரண்ட பனிபடலமாக காட்சியளிக்கிறது.

பொதுமக்கள் கருத்து
இதற்கு தற்போது பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஒரு மிகப்பெரிய சாதனை என ஒருவர் கூறியுள்ளார். இன்னொருவர், ‛‛நீங்கள் பார்ப்பது வெளிநாட்டில் உள்ள ரயில்வே மேம்பாலம் இல்லை. இந்தியாவில் உள்ள செனாப் மேம்பாலம் என கருத்து தெரிவித்துள்ளார். மற்றொருவரோ, ‛‛இது ஒரு வளர்ச்சிக்கான முயற்சி. ஈபிள் டவரை விட இது உயரமான பாலத்தின் அற்புதமான காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது'' என கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications