சூடம் கொளுத்தினால் வருவார்.. சீண்டிய அண்ணாமலை.. சூடாக பதிலடி கொடுத்த திமுக எம்.பி செந்தில் குமார்!
தருமபுரி : சூடம் கொளுத்தி பூமி பூஜை செய்தால் போதும் தி.மு.க எம்.பி.யை உடனே பார்த்து விடலாம் என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியதற்கு, திமுக எம்.பி செந்தில் குமார் பதிலடி கொடுத்துள்ளார். அண்ணாமலையைப் போல மாற்றி மாற்றிப் பேசும் ஆள் நான் கிடையாது எனக் கூறியுள்ளார் தருமபுரி எம்.பி செந்தில் குமார்.
சமீபத்தில், அரசு நிகழ்ச்சிகளில் இந்து மத பூஜை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் தருமபுரி திமுக எம்.பி செந்தில் குமார். இதற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், தருமபுரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் திமுக எம்.பி செந்தில் குமாரின் செயலை விமர்சித்துப் பேசினார் அண்ணாமலை. அதுகுறித்த கேள்விக்கு பதில் கொடுத்துள்ளார் செந்தில் குமார்.
கஞ்சிபாணி இம்ரான் & கூட்டாளிகளை உடனே கைது செய்து நாடு கடத்துங்கள்.. முதல்வருக்கு ஓபிஎஸ் வேண்டுகோள்!
திமுக எம்.பி கண்டிப்பு
சில மாதங்களுக்கு முன்பு தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் தமிழக அரசு சார்பில் அதிநவீன நூலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர், தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி எம்.பி டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அனைவருகுமான அரசு நிகழ்ச்சியில் ஒரு மதம் சார்ந்த சடங்குகளை மட்டும் கடைபிடிப்பதாக இருந்தால் என்னை கூப்பிடாதீர்கள் என கண்டிப்பு காட்டினார் திமுக எம்.பி செந்தில் குமார்.
அனைத்து மத சடங்குகளும்
அதற்கு முன்னதாகவும், தருமபுரி மாவட்டத்தில் ஏரி சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி ஒன்றில் பூமி பூஜை நடத்தப்பட்டதற்கு தருமபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் எதிர்ப்புத் தெரிவித்தார். அரசு விழாக்களில் இந்து சம்பிரதாய நிகழ்வுகள் நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தைச் சார்ந்தவர்களையும் அழைத்து நடத்துங்கள். ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக் கூடாது, சர்ச் பாதரையும் கூப்பிடுங்கள், மசூதி இமாமை கூப்பிடுங்கள் என்று செந்தில்குமார் எம்.பி அதிகாரிகளிடம் தெரிவித்தார். இது அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
சூடம் கொளுத்தினால் எம்.பி வருவார்
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள்., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் அண்ணாமலை பேசும் போது, "இங்கு ஒரு எம்.பி. இருக்கிறார். அவரை, நீங்கள் பிடிக்க வேண்டும் என்றால், ஒரு சூடம் கொளுத்தி பூமி பூஜை வைத்தால் போதும். அவர் உடனே கிளம்பி வந்து விடுவார்" என கிண்டலாக விமர்சித்தார்.
திமுக எம்பி பதிலடி
இந்நிலையில், அண்ணாமலையின் கிண்டல் பேச்சு பற்றிய கேள்விக்கு திமுக எம்.பி செந்தில் குமார் பதில் அளித்துள்ளார். செந்தில் குமார் எம்பி பேசுகையில், "பாஜக பொதுக்கூட்டத்தில் திரண்டிருந்த காலி சேர்கள் என சமூக வலைதளங்களில் கிண்டல் செய்தார்களே.. அந்தக் கூட்டத்தில் பேசியதை பற்றி கேட்கிறீர்களா? யாருடைய வீட்டிலாவது சூடம் ஏற்றுவதை பற்றி நான் கேட்கவில்லை. அரசு சார்ந்த நிகழ்ச்சிகளில் மதச்சார்பற்ற வகையில் செயல்பட வேண்டும் என்பது திமுக முதல் முறையாக ஆட்சிக்கு வந்தபோது பேரறிஞர் அண்ணா வெளியிட்ட அரசாணை.
நான் அண்ணாமலை மாதிரி அல்ல
அரசாங்கம் என்பது மதச்சார்பற்றது என்ற அடிப்படையில் தான், நான் அரசு விழாவில் இந்து மத சடங்கிறகு எதிர்ப்பு தெரிவித்தேன். நான் என் கொள்கைப்பிடிப்பில் வலுவாக இருக்கிறேன். அண்ணாமலை போல கர்நாடகாவில் வேலை செய்யும்போது பெருமைமிகு கன்னடர் என்று பேசிவிட்டு இப்போது மாற்றிப் பேசும் ஆள் நான் இல்லை." என பதிலடி கொடுத்துள்ளார் திமுக எம்.பி செந்தில் குமார்.