“பூஜை” கல்லை எட்டி உதைத்தேனா? மன்னிப்பு கேளுங்க “சுமந்த்”! போலீசில் புகாரளித்த எம்பி செந்தில்குமார்
தருமபுரி: அதியமான் கோட்டையில் பூமி பூஜைக்காக வைக்கப்பட்ட செங்கல்லை திமுக எம்பி செந்தில்குமார் எட்டி உதைந்ததாக வலதுசாரி சிந்தனையாளர் சுமந்த் ஸ்ரீ ராமன் கூறியுள்ள நிலையில், இதுபோன்ற தவறான தகவலை வெளியிட்டதற்காக அவர் மீது போலீசில் புகாரளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரம் முன்பாக தருமபுரி மாவட்டம் ஆலாபுரம் ஏரியில் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சியில் தருமபுரி எம்.பி செந்தில்குமார் பங்கேற்றார். அங்கு இந்து மதம் சார்ந்து மட்டும் சடங்குகள் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அரசு விழாவில் மதச் சம்பிரதாயங்கள் நடத்தக் கூடாது என்றும், தேவைப்பட்டால் மூன்று மதத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து மத சடங்குகளை நடத்த வேண்டும் எனவும் அவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பூஜை.. 'என்னை கூப்பிடாதீங்க..’ ஒன்றிய செயலாளரை கண்டித்த திமுக எம்.பி செந்தில்குமார்! பரபரப்பு
நூலகத்துக்கு அடிக்கல்
தருமபுரி மாவட்டம் அதியமான் கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் வளாகத்தில் தமிழக அரசு சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அதிநவீன நூலகம் கட்டும் பணிக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பூமி பூஜை கல்
பூமி பூஜை முடிந்த பிறகு பூஜைக்கு வைத்திருந்த கல்லை திமுக எம்.பி செந்தில்குமார் காலால் தள்ளியதாகவும், இதனால் அங்கு பெரும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்தவர்களிடம், "ஒரு முறை சொல்லலாம். இரண்டு முறை சொல்லலாம். ஒவ்வொரு முறையுமா பிரச்சனை செய்ய முடியும்." என செந்தில்குமார் கோபமாக பேசும் காட்சிகளும்.
சுமந்த் ஸ்ரீ ராமன்
இந்த செய்திகளை பாஜகவினர் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் அதிகளவில் பகிர்ந்து செந்தில்குமாருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதேபோல் ட்விட்டரில் வலதுசாரி சிந்தனையாளரான சுமந்த் ஸ்ரீ ராமன், மு.க.ஸ்டாலினை கவிழ்க்க திமுகவிற்குள் ஒரு அணி செயல்பட்டு வருகிறது. செங்கற்கல்லில் மஞ்சள், குங்குமம் இருக்கக்கூடாது என்று நீங்கள் நினைத்தால் அதை முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும். அதைவிடுத்து இந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவது சரியல்ல." என்று பதிவிட்டார்.
செந்தில் குமார் விளக்கம்
இதற்கு பதிலளித்த எம்பி செந்தில் குமார், ஒரு வீடியோவை பதிவிட்டு "சுமந்த் உங்களுக்கு வெட்கம் இருந்தால் இந்த பதிவை நீக்கிவிட்டு மன்னிப்பு கேளுங்கள். இது அரசு செய்தித்தொடர்பாளர் எடுத்த வீடியோ. உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் மாவட்ட ஆட்சியர் மற்றும் பாமக எம்எல்ஏ வெங்கடேசனிடம் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இடம்தரவே தற்களை நகர்த்தினேன். அது கும்கும் அல்ல. குங்குமம். மத பதற்றத்தை தூண்டும் வகையிலும், ஒற்றுமையை குலைக்க முயலும் விதமாகவும் விஷமத்தனமான உள்நோக்கத்துடன் தவறான செய்தியை பகிர்ந்ததற்காக உங்கள் மீது எதிராக புகார் அளித்துள்ளேன்." என சென்னை மற்றும் தமிழ்நாடு காவல்துறையை டேக் செய்து ட்வீட் செய்துள்ளார்.