வத்தல்மலைக்கு 2 டிக்கெட் கொடுங்க! அரசுப் பேருந்தில் பயணித்த அமைச்சர்கள்! ருசிகர நிகழ்வு!
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் மினி ஊட்டி என்றழைக்கப்படும் மலைக்கிராமமான வத்தல்மலைக்கு வரலாற்றிலேயே முதல்முறையாக பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்த அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் யாரும் எதிர்பார்க்காத வகையில் வத்தல்மலைக்கு அரசுப் பேருந்திலேயே ஒரு டிரிப் அடித்து அதிகாரிகளை திக்குமுக்காட வைத்தனர்.
சுதந்திர இந்தியாவில் வத்தல்மலைக்கு முதல்முறையாக பேருந்து சேவை தொடங்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை என்பது கூடுதல் தகவல்.
தருமபுரி மாவட்டம்
சில மாதங்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை புரிந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் மலைக்கிராமமான வத்தல் மலைக்கு பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் முறையிட்டனர். அதனை ஏற்று விரைவில் உங்க ஊருக்கு பஸ் விடப்படும் என்ற உறுதியை கொடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். அவர் சொன்ன சொல் பொய்யாகிவிடக் கூடாது என்பதில் மிக உறுதியாக நின்ற போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வத்தல்மலைக்கு புதிய பேருந்து சேவையை கொண்டு வந்து முதலமைச்சர் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றியிருக்கிறார்.
பேருந்தில் பயணம்
இதனிடையே மலைக்கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்கள் சிவசங்கர் மற்றும் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகிய இருவரும், யாரும் எதிர்பார்க்காத வகையில் வத்தல்மலைக்கு ஒரு டிரிப் அடித்தனர். தருமபுரி மாவட்ட மக்களால் மினி ஊட்டி என வர்ணிக்கப்படும் வத்தல்மலையானது இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழ்வது குறிப்பிடத்தக்கது. கார், டூவீலர்கள் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலையை மாற்றி பேருந்திலும் இனி வத்தல்மலைக்கு சென்று வரலாம்.
ஜாலியாக பேச்சு
சுமார் 35 கிலோமீட்டர் தூரம் அரசுப் பேருந்தில் பயணித்த அமைச்சர்கள் இருவரும் தங்களுடன் வந்த அதிகாரிகளிடம் ஜாலியாக பேசிக்கொண்டே சென்றனர். மலைப்பகுதி என்பதால் எப்போதுமே மிகுந்த கவனத்தோடு பேருந்தை இயக்க வேண்டும் என அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுரையும் நல்கினார்.
மக்கள் வரவேற்பு
இந்தியா சுதந்திரம் பெற்று 75-ஆவது ஆண்டு விழா கொண்டாடக் கூடிய இந்த தருணத்தில் தங்கள் மலைக்கிராமத்திற்கு அரசுப் பேருந்து சேவை தொடங்கப்பட்டிருப்பதற்கு வத்தல் மலை கிராம மக்கள் மிகுந்த வரவேற்பு தெரிவித்துள்ளனர். சொல்லும் செயலும் மாறாதவர் முதலமைச்சர் ஸ்டாலின் என வத்தல்மலைவாசிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்.