காஷ்மீரில் இறந்த தமிழக ராணுவ வீரர்.. 42 குண்டுகளுடன் உடல் அடக்கம்.. சோகத்தில் தர்மபுரி
தர்மபுரியை சேர்ந்த ராணுவ வீரர் உடல் அடக்கம் செய்யப்பட்டது
தர்மபுரி: தர்மபுரியை சேர்ந்த ராணுவ வீரர் ஜம்மு காஷ்மீரில் நடந்த விபத்தில் பலியானார். அவரது உடல் சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கம்மாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சாமிநாதன்..மனைவி பெயர் சித்ரா. இவர்களது மூத்த மகன் பூபதி... கடந்த 2015-ல் பூபதி ராணுவத்தில் சேர்ந்தார்... இவருக்கு ஒரு தம்பி மற்றும் தங்கை உள்ளனர். ஆனால், பூபதிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கடந்த மாசத்துக்கு முன்புதான், தன்னுடைய தங்கை கல்யாணத்தை பூபதி நடத்தி வைத்தார்.. அதன்பிறகு மறுபடியும் ராணுவத்துக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜம்மு-காஷ்மீரில் நடந்த வாகன விபத்தில் பூபதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊரான கம்மாளப்பட்டிக்கு ராணுவ வாகனத்தின் மூலம் கொண்டு வரப்பட்டது. பின்னர் அவர்களது வழக்கப்படி சடங்குகள் செய்யப்பட்டன.
புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்.. கணவர் வழியில் ராணுவத்தில் சேர்ந்த மனைவி!
தர்மபுரி கலெக்டர் திவ்யதர்ஷினி, சார் ஆட்சியர் பிரதாப், பாலக்கோடு எம்எல்ஏ அன்பழகன் பூபதியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பூபதியின் உடலுக்கு, பெங்களூருவில் இருந்து வந்திருந்த ராணுவ வீரர்கள் குழுவினர் மரியாதை செய்தனர்.
இதன் பின்னர் 42 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து அவருடைய உடல், அவரது சொந்த நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்