பாத்திருக்க வாய்ப்பே இல்ல.. இப்படி எல்லாம் திருவிழாவா? சேற்றில் முக்கி செருப்பால் அடித்து.. வினோதம்!
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவையொட்டி சேற்றையும் மாடுகளுக்கு ஊற்றும் கழனிதண்னீரையும் கலந்து உடம்பில் பூசி, பக்தர்களை விளக்குமாறு மற்றும் செருப்பால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய வினோத திருவிழா நடைபெற்றது.
அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனிரில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி நடைபெற்று வந்த திருவிழாவில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் திருவிழா
தொர்ந்து பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருவிழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமையன்று சேத்தாண்டி வேடம் என்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.

சேற்றை பூசி நேர்த்திக் கடன்
அதன்படி நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு உடலில் சேறு, கரி போன்றவற்றை பூசிக்கொண்டு கோயில் முன்பாக அமர்ந்திருப்பர். அதன் பின்னர் உடைந்த மண் கலயத்தில் மாடுகளின் கஞ்சித் தொட்டியில் உள்ள பழைய சாதத்தை எடுத்து வந்து செருப்பு மற்றும் துடைப்பத்தில் தொட்டு ஒவ்வொருவர் தலையிலும் அவர்களது உறவினர்கள் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோடைக்கால நோய்கள்
அதனைத் தொடர்ந்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று கோயில் குளத்தில் நீராடி நேர்த்திக்கடனை முடித்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியபோது இது போன்ற நேர்த்திக் கடனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செலுத்தி வருகிறோம். உடலில் சேறு பூசிக் கொள்வதால் கோடை காலத்தில் சரும மற்றும் உஷ்ண நோய்கள் ஏற்படாமல் இருக்கும்.

வேண்டுதல் நிறைவேறும்
மேலும் துடைப்பம் மற்றும் செருப்பால் அடி வாங்குவதன் மூலம் சகிப்புத்தன்மை பெருகி சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வழி ஏற்படும் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் அம்மனை கங்கையில் கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நடைபெற்றது.












Click it and Unblock the Notifications