பணத்துக்கு வாய்ப்பில்லை.. உழைப்புக்குத்தான் மரியாதை.. திமுக வைத்த ட்விஸ்ட்டால் உற்சாக உடன்பிறப்புகள்
திண்டுக்கல் : பணபலமும் அரசியலில் பெரிய பின்னணியும் இல்லாமல் கட்சிக்காக உண்மையாக உழைத்த பெண் ஒருவருக்கு திண்டுக்கல் மேயர் பதவியை வழங்கி உள்ள நிலையில் திமுகவினர் கட்சித் தலைமையை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒரு மாநகராட்சிகளையும் பெரும்பாலான நகராட்சி பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே கைப்பற்றின.

திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன . குறிப்பாக மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 25 இடங்களுக்கும் 5 இடங்கள் கூடுதலாக அதாவது 30 வார்டுகளில் திமுக தனித்தே வென்றுள்ளது. திமுக 30 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

பலத்த எதிர்பார்ப்பு
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையில் திமுக சார்பில் வெற்றி பெற்ற 18 பெண் கவுன்சிலர்கள் இடையே மேயர் பதவியைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவியது. குறிப்பாக இந்திராணி லட்சுமி நித்யா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் மேயர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் தீவிரமாக பணியாற்றி வந்தனர். ஆனால் இதுகுறித்து நேற்றைய தினம் காலை வரை எந்த முடிவும் எடுக்காமல் திண்டுக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளரான அமைச்சர் ஐ.பெரியசாமி இருந்ததாக கூறப்பட்டது.

பலத்த போட்டி
பலர் மேயர் மற்றும் துணை மேயர் போட்டியில் நீடித்த நிலையில் கட்சியில் உழைத்தவர்களுக்கு தான் பதவி என திமுக துணைப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான ஐ.பெரியசாமி கூறியது முக்கியத்துவம் பெற்றது. மேலும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கே மேயர் மற்றும் துணை மேயர் பதவியைக் கொடுக்க வேண்டுமெனவும் தொண்டர்கள் வலியுறுத்தி வந்த நிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி என்ன முடிவு எடுப்பார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. கட்சிக்காக நீண்ட காலமாக உழைத்த மாநகர் செயலாளரான ராஜப்பாவுக்கு துணை மேயர் பதவி கொடுக்கப்பட்ட நிலையில் மேயராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இளம் வயது இளமதி
இந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இளம் வயதான வார்டு உறுப்பினரான இளமதி என்பவர் திண்டுக்கல் மாநகர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரிய அளவில் பணபலமும் அல்லது அரசியல் பின்புலமும் இல்லாமல் இருந்தாலும் இளமதி கட்சிக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருந்தவர் அவர் தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பு அதிகம் என திமுகவினர் கூறிவந்த நிலையில் அவரையே மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்துள்ளது. இன்று நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்று இளமதிக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி, சக்கரபாணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். பணபலம் இல்லாமல் கட்சிக்கு உழைத்த அவருக்கு பதவி வழங்கியுள்ளதால் திண்டுக்கல் மாவட்ட திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications